சுங்கை பட்டாணி, ஏப்ரல் 12: எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 15 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சிலாங்கூர் சுக்மா (SUKMA) விளையாட்டுப் போட்டியில், விளையாட்டு வீரர்களுக்கெனப் பிரத்யேகத் தங்குமிடம் அமைக்கப்படாது என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முகமது தவ்பிக் ஜோஹாரி அறிவித்துள்ளார்.
செலவினங்களைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக, கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சுக்மா உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சுங்கை பட்டாணி நாடாளுமன்றத் தொகுதி சேவை மையம் ஏற்பாடு செய்திருந்த ஹரிராயா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இம்முறை போட்டிகளை நடத்தும் சிலாங்கூர் மாநில அரசு, விளையாட்டுத் திடல்கள் மற்றும் இடங்கள் குறித்த விரிவான விளக்கத்தை வழங்கியதாகத் தெரிவித்தார்.
அதன்படி, ஒவ்வொரு வீரருக்கும் ஒரு நாளைக்கு 100 வெள்ளி தங்கும் விடுதி மானியமாக (Subsidi Penginapan) வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலக் குழுவும் தங்களின் வீரர்களுக்கான தங்கும் இடங்களை அந்தந்த போட்டி நடைபெறும் இடங்களுக்கு அருகாமையில் தாங்களாகவே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் விளக்கமளித்தார்.
இந்த 2026 சுக்மா விளையாட்டுப் போட்டி குறைந்த செலவில், எளிமையான முறையில் திட்டமிடப்பட்டிருந்தாலும், போட்டிகளின் தரம், வீரர்களின் செயல்திறன் அல்லது ஒட்டுமொத்த ஏற்பாடுகளில் எந்தவொரு சமரசமும் செய்யப்படாது என்று டாக்டர் முகமது தவ்பிக் ஜோஹாரி உறுதியாகத் தெரிவித்தார்.







