அம்பாங் பாயிண்ட் வணிக வளாகத்தில் நிலம் உள்வாங்கிய சம்பவம்: விரைந்து நடவடிக்கை எடுத்தது எம்பிஏஜே

11 ஏப்ரல் 2026, 7:24 AM
அம்பாங் பாயிண்ட் வணிக வளாகத்தில் நிலம் உள்வாங்கிய சம்பவம்: விரைந்து நடவடிக்கை எடுத்தது எம்பிஏஜே
அம்பாங் பாயிண்ட் வணிக வளாகத்தில் நிலம் உள்வாங்கிய சம்பவம்: விரைந்து நடவடிக்கை எடுத்தது எம்பிஏஜே
அம்பாங் பாயிண்ட் வணிக வளாகத்தில் நிலம் உள்வாங்கிய சம்பவம்: விரைந்து நடவடிக்கை எடுத்தது எம்பிஏஜே

ஷா ஆலம், ஏப்ரல் 11: அம்பாங் பாயிண்ட் (Ampang Point) வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நேற்று ஏற்பட்ட நிலம் உள்வாங்கிய சம்பவம் தொடர்பாக, அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) மேல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து நகராண்மை கழகம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, நிலம் உள்வாங்கியதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்று பள்ளத்தில் சிக்கிக்கொண்டது.

தகவலறிந்து விரைந்து வந்த நகராண்மை கழகத்தின் அமலாக்கத்துறை அதிகாரிகள், அந்த வாகனத்தை உடனடியாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்ட பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தற்போது அந்த இடம் அதிகாரிகளின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நகராண்மை கழகத்தின் பொறியியல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தைப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளனர்.

கட்டிடத்தின் உறுதித்தன்மை மற்றும் நிலத்தின் தற்போதைய நிலை குறித்து விரிவான மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே, உரிய சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பு அதிகாரிகளால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை முறையாகப் பின்பற்றி ஒத்துழைப்பு நல்குமாறும் அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.