நாட்டில் மருந்து கையிருப்பு ஜூன் மாதம் வரை சீராக இருக்கும்: சுகாதார அமைச்சர்

10 ஏப்ரல் 2026, 8:14 AM
நாட்டில் மருந்து கையிருப்பு ஜூன் மாதம் வரை சீராக இருக்கும்: சுகாதார அமைச்சர்

ஷா ஆலம், ஏப்ரல் 10: மலேசியாவின் மருந்து விநியோகம் எதிர்வரும் ஜூன் மாதம் வரை எவ்விதத் தடையுமின்றி சீராக இருக்கும் எனச் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் உறுதி அளித்துள்ளார்.

அரசாங்கத்தின் கையிருப்பு மற்றும் மருந்து உற்பத்தித் துறையினரின் விநியோகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்ததன் அடிப்படையில் இந்த உறுதித்தன்மை எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2026-ஆம் ஆண்டிற்கான உலக செவித்திறன் தினக் கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலைக்கு மத்தியிலும் விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்காணிக்க அரசாங்கம் எப்போதும் விழிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல் சூழல் தொடருமானால், நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையிலான தணிப்பு நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுக்கும் என்றும், எனவே பொதுமக்கள் இது குறித்து அச்சமோ அல்லது தேவையற்ற பதற்றமோ அடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மருந்து விநியோகத் தரவுகளைப் பெறுவதற்கும், இன்சுலின் (Insulin) மற்றும் தடுப்பூசிகள் (Vaccine) போன்ற அத்தியாவசியத் தேவைகளைக் கண்காணிப்பதற்கும் துறை சார்ந்த நிறுவனங்களுடன் அமைச்சகம் நெருக்கமான ஆலோசனைகளை நடத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதே வேளையில், உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு காரணமாக, மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதை அவர் ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், இத்தகைய விலை உயர்வு நாட்டின் சுகாதார சேவையைப் பாதிக்காது என்றும், போதுமான மருந்து விநியோகத்தை உறுதி செய்வதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் டாக்டர் சுல்கிப்ளி உறுதியளித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.