ஷா ஆலம், ஏப்ரல் 10 - கோல சிலாங்கூரில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் இந்தோனேசிய நாட்டினருக்குச் சொந்தமான 15 சட்டவிரோதக் குடியிருப்புகள், அதிகாரிகள் நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கையில் இடித்துத் தகர்க்கப்பட்டன.
பூஞ்சாக் ஆலாம் 2 தேசியப் பள்ளி (SK) மற்றும் பூஞ்சாக் ஆலாம் 2 சமயப் பள்ளிக்கு (SRA) அருகே மறைவாக அமைந்திருந்த இந்த சட்டவிரோதக் குடியிருப்பு கண்டறியப்பட்டதாகக் கோல சிலாங்கூர் மாவட்ட மற்றும் நில அலுவலகம் (PDT) தெரிவித்தது.
"தேசிய நிலச் சட்டத்தின் 425வது பிரிவின் கீழ், அரசாங்க நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த குற்றத்திற்காக, கோல சிலாங்கூர் PDT அமலாக்கப் பிரிவினரால் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது," என்று அந்த அலுவலகம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டது.
இந்த நடவடிக்கையின் போது, 15 தற்காலிக வீடுகளுடன், நான்கு கிடங்கு கட்டமைப்புகளும் இடித்துத் தள்ளப்பட்டன. எந்தவித இடையூறும் இன்றி இந்த நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது.
இந்த நடவடிக்கையில் சிலாங்கூர் நிலம் மற்றும் கனிமவள அலுவலகம் (PTGS), கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் (MPKS), மலேசிய காவல்துறை (PDRM), பொதுப்பணித் துறை (JKR), மலேசிய தற்காப்புப் படை (APM), மாவட்டக் கல்வி அலுவலகம் (PPD) மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கின.
இந்த நடவடிக்கையின் போது ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் துறைகள் மற்றும் ஏஜென்சிகளுக்குக் கோல சிலாங்கூர் PDT தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
"கோல சிலாங்கூர் மாவட்டத்தின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, அரசாங்க நிலங்களில் சட்டவிரோதக் குடியேற்றங்கள் ஏற்படுவதைத் தடுக்க, கோல சிலாங்கூர் PDT அவ்வப்போது கண்காணிப்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்," என்றும் அது கூறியது.
இந்தோனேசியர்களுக்குச் சொந்தமான 15 சட்டவிரோதக் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன
10 ஏப்ரல் 2026, 7:47 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சட்டவிரோத நடவடிக்கைகளில் பறிமுதல் செய்யப்படும் நிதி மக்களுக்கே சேரும் – பிரதமர்
Bernama
30 ஆகஸ்ட் 2026

selangor
தெலோக் பங்லிமா காராங்: சட்டவிரோதக் குப்பை தளத்தை சுத்தம் செய்து, எச்சரிக்கை பலகை நிறுவியது MPKL
Media Selangor Team
19 ஆகஸ்ட் 2026

national
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய RM6,000 செலுத்திய மியான்மர் தம்பதியர்
Media Selangor Team
12 ஆகஸ்ட் 2026

selangor
சிலாங்கூரில் இதுவரை 72 சட்டவிரோதத் தொழிற்சாலைகள் இடிக்கப்பட்டன
Shalini Rajamogun
3 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?




