லுண்டு, ஏப்ரல் 10: நாட்டின் உணவு உற்பத்திக்கு பங்களிக்கும் வகையில், பயன்படுத்தப்படாத அல்லது தரிசாக உள்ள விவசாய நிலங்களின் உரிமையாளர்கள், தங்கள் நிலங்களை குத்தகைக்கு விடுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு, இந்த நடவடிக்கை நிலப் பயன்பாட்டை மேம்படுத்துவதோடு, உணவு இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்று கூறினார்.
நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்தை யாருக்கும் விற்கத் தேவையில்லை என்றும், மாறாக, அப்பகுதியை மேம்படுத்த விரும்பும் நிறுவனங்கள் அல்லது தொழில் முனைவோருக்கு குத்தகைக்கு விடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
"பொதுவாக, ஒரு நிறுவனம் குத்தகைக்கு எடுக்க விரும்பினால், அது 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான நீண்ட காலத்திற்கு உட்பட்டதாக இருக்கும்.
ஏனெனில், விவசாயத்தில் பயிரிடுவது முதல் அறுவடை செய்வது வரை அதிக காலம் எடுக்கும்," என்று இங்குள்ள தஞ்சோங் புருன் நெல் பயிரிடும் திட்டத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், ஒரு காலத்தில் மலேசியா உலகின் முக்கிய ரப்பர் ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இருந்தது, ஆனால் இப்போது உள்நாட்டு உற்பத்தி போதுமானதாக இல்லாததால் மூலப்பொருளை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று முகமது சாபு குறிப்பிட்டார்.
பல ரப்பர் சிறு விவசாயிகளின் நிலங்கள் தற்போது பயிரிடப்படாமல் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்."இளம் தலைமுறையினர் நகரங்களுக்கு இடம்பெயர்வதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
இதனால் ரப்பர் தோட்டங்கள் கவனிக்கப்படாமல் விடப்படுகின்றன."மேம்பாட்டு நோக்கங்களுக்காக நிலத்தை குத்தகைக்கு எடுக்க சிலர் விரும்பும்போது, சில உரிமையாளர்கள் அதை பரம்பரை நிலமாகக் கருதி மறுத்து விடுகின்றனர்.
இறுதியில், அந்த நிலம் தொடர்ந்து தரிசாகவே விடப்படுகிறது," என்று அவர் மேலும் கூறினார்.







