புத்ராஜெயா, ஜன 28 – முலாம் பழ சாகுபடி, மீன்வளத் துறை மற்றும் ட்ரோன் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நெல் சாகுபடியை நவீனமயமாக்குதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மலேசியாவும் உஸ்பெகிஸ்தானும் ஆராய்ந்து வருகின்றன.
உஸ்பெகிஸ்தானின் சிர்டார்யா மாநில ஆளுநர் எர்கின்ஜோன் துர்டிமோவ், விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது சாபுவை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது இவ்விஷயம் தெரிவிக்கப்பட்டதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு (KPKM) கூறியது.
"நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் மலேசியாவின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப, விவசாயம் மற்றும் விவசாய உணவுத் துறையில் மலேசியா-உஸ்பெகிஸ்தான் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள இந்தச் சந்திப்பு ஒரு தளமாக அமைந்தது."
"முலாம் பழ சாகுபடி மேம்பாடு, மீன்வளத் துறை மற்றும் ட்ரோன்கள் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெல் சாகுபடியை நவீனமயமாக்குவதில் சாத்தியமான ஒத்துழைப்பு ஆகியவற்றில் கலந்துரையாடல் கவனம் செலுத்தியது," என்று அமைச்சு இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்தச் சந்திப்பின் போது, "உணவுப் பாதுகாப்பிற்காக மதிப்பை உருவாக்குதல்" என்ற கருப்பொருளுடன் செர்டாங், MAEPS-இல் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெறவுள்ள விவசாயம், தோட்டக்கலை மற்றும் விவசாய சுற்றுலா கண்காட்சி (MAHA) 2026-இல் பங்கேற்க உஸ்பெகிஸ்தானுக்கு முகமது சாபு அழைப்பு விடுத்தார்.
இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பில் மலேசியாவுக்கான உஸ்பெகிஸ்தான் தூதர் கரோமிடின் கடோவ் மற்றும் விவசாய அமைச்சின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
உஸ்பெகிஸ்தானில் உள்ள சிர்டார்யா மாநிலம், பருத்தி, கோதுமை மற்றும் முலாம் பழம் போன்ற பயிர்களை உற்பத்தி செய்யும் ஒரு விவசாயப் பகுதியாக அறியப்படுகிறது.
2025 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மலேசியாவிற்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான விவசாயத் துறையின் வர்த்தக மதிப்பு 266 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
காபி, கொக்கோ, தேநீர், மசாலாப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட விவசாயப் பொருட்கள் போன்ற பல்வேறு மலேசிய விவசாயப் பொருட்களை அந்நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதும், உஸ்பெகிஸ்தானில் இருந்து பழங்களை இறக்குமதி செய்வதும் இதில் அடங்கும்.


