ஷா ஆலம், ஏப்ரல் 10: பத்து தீகா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 19 மாணவர்கள், தங்களின் உயர்கல்வியைத் தடையின்றித் தொடங்குவதற்கான முதற்கட்ட நிதியுதவியைப் பெற்றுள்ளனர்.
உயர்கல்வி நிறுவனங்களில் கால்பதிக்கும் இந்த மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்து கருத்துரைத்த பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டானியல் அல்-ரஷிட் ஹாரூன், பல்கலைக்கழகப் பதிவுக்கட்டணம், தங்குமிடச் செலவுகள் மற்றும் அடிப்படைத் தேவைகளைச் சமாளிக்க முடியாமல் சிரமப்படும் குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்டார்.
மாணவர்களின் குடும்பப் பின்னணியைக் கருத்தில்கொண்டு, தலா 200 முதல் 300 ரிங்கிட் வரையிலான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக, பி40 (B40) பிரிவைச் சேர்ந்த குடும்பங்களுக்கும், பட்டயப் படிப்பு (Diploma) மற்றும் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பைத் தொடங்கும் மாணவர்களுக்கும் இந்த நிதியுதவியில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
பத்து தீகா தொகுதியில் உள்ள இளைஞர்கள் கல்வித் துறையில் மேலோங்குவதை உறுதிசெய்யும் நோக்கில், இது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தங்களின் தொடர்ச்சியான கடப்பாடாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த அதிகப்படியான மாணவர்கள் பயன்பெறும் வகையில், எதிர்காலத்தில் இத்திட்டம் இன்னும் விரிவுபடுத்தப்படும் என்று டானியல் உறுதி அளித்தார்.
இளைய தலைமுறையினரின் கல்வி மேம்பாடு மற்றும் அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காகப் பத்து தீகா சட்டமன்ற அலுவலகம் எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.








