ஷா ஆலம், ஏப்ரல் 2: நாட்டிற்குள் அபாயகரமான கழிவுகள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் உறுதியான நடவடிக்கையாக, மின்னணுக் கழிவுகள் (e-waste) இறக்குமதிக்கு மலேசியா ஏப்ரல் 1 முதல் முழுமையான தடையை அமல்படுத்தியுள்ளது.
அண்மையில் அரசிதழில் வெளியிடப்பட்ட திருத்தத்தின் மூலம், சுங்க (இறக்குமதி மீதான தடை) உத்தரவு 2023-இன் கீழ், மின்னணுக் கழிவுகளின் இறக்குமதி இப்போது முழுமையான தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மலேசிய அரச சுங்கத் துறை (JKDM) தெரிவித்தது.
சுங்கச் சட்டம் 1967-இன் துணைப்பிரிவு 31(1)-க்கு இணங்க இந்த அரசிதழ் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ அம்ரான் அஹ்மட் கூறினார்."மலேசியாவிற்கு மின்னணுக் கழிவுகளை இறக்குமதி செய்வது, கூட்டரசு அரசிதழ் மூலம் சுங்க (இறக்குமதி மீதான தடை) உத்தரவு 2023-இன் முதல் அட்டவணையின் கீழ், முற்றிலும் தடைசெய்யப்பட்ட பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.2026-ஆம் ஆண்டுக்கான பிளாஸ்டிக் மற்றும் மின்னணுக் கழிவுகள் இறக்குமதி அமலாக்க மேலாண்மை திசைக்கான சிறப்புப் பணிக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறினார்.
"நாட்டிற்குள் அபாயகரமான கழிவுகள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது," என்றார். சுற்றுச்சூழல் துறை (JAS) மற்றும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (AKPS) உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களுடன் சுங்கத் துறை தனது ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்."
பேசல் உடன்படிக்கையின் கீழ் மலேசியாவின் கடப்பாட்டிற்கு இணங்க, பட்டியலிடப்பட்ட கழிவுகள், குறிப்பாக மின்னணுக் கழிவுகள் இறக்குமதி மீதான தடை கடுமையாகவும் திறமையாகவும் அமல்படுத்தப் படுவதை இந்த ஒத்துழைப்பு உறுதி செய்யும்," என்று அவர் மேலும் கூறினார்.






