ஷா ஆலம், மார்ச் 31 - தெலுக் பங்லிமா காராங்கில் உள்ள ஒரு திட்டத்தளத்தின் மேம்பாட்டாளர், கழிவு மேலாண்மை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்கத் தவறியதையடுத்து, கோல லங்காட் நகராட்சி மன்றம் (எம்பிகேஎல்) அவருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறையின் அமலாக்கப் பிரிவு நடத்திய சோதனையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எம்பிகேஎல் கூறியது. அந்தத் திட்டக்களத்தின் தூய்மை நிலை திருப்திகரமாக இல்லை என்றும், பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் சோதனையில் கண்டறியப்பட்டது.
"1976-ஆம் ஆண்டு உள்ளூராட்சி சட்டத்தின் (சட்டம் 171) பிரிவு 109-இன் கீழ், திடக்கழிவு மேலாண்மைக்கான ஒப்புதல் நிபந்தனைகள் மற்றும் உத்தரவுகளை மீறிய குற்றத்திற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டதோடு அபராதம் விதிக்கப்பட்டது.
திட்டக்களம் மற்றும் தொழிலாளர் தங்குமிடங்களை முறையாகப் பராமரிக்கத் தவறியதும் இதில் அடங்கும்," என்று எம்பிகேஎல் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
மேலும், கொசுக்கள் உற்பத்தி, திடக்கழிவுகளை ஒழுங்கற்ற முறையில் கொட்டுதல் மற்றும் சுற்றியுள்ள மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் திறந்தவெளியில் எரித்தல் போன்ற பிற குற்றங்களும் கண்டறியப்பட்டதாக அந்த உள்ளூராட்சி மன்றம் குறிப்பிட்டது.
சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான சட்டங்களை மீறும் எந்தத் தரப்பினருடனும் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்று எம்பிகேஎல் உறுதியாகத் தெரிவித்துள்ளது.
கோல லங்காட் மக்களின் நல்வாழ்வையும் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதற்காக, அமலாக்க நடவடிக்கைகள் அவ்வப்போது தீவிரப்படுத்தப்படும் என்றும் அது மேலும் கூறியது.









