ஷா ஆலம், ஜன 22 - கடந்த 19 ஜனவரி அன்று டெங்கில் பகுதியில் உள்ள சைபர்வெல்லி மற்றும் சைபர்சவுத் சுற்றுவட்டாரங்களில் நடத்திய வணிக சோதனை நடவடிக்கையில், மொத்தம் 13 நோட்டீஸ்களை சிப்பாங் நகராண்மை கழகம் வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் வணிக வளாக உரிமங்கள், நடைபாதைகள் மற்றும் பின்புற வழித்தடங்களில் உள்ள தடைகள், மேலும் விளம்பர பலகைகள் தொடர்பான கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட துணைச் சட்டங்கள் (UUK) மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க உள்ளதா என்பதை உறுதி செய்யப்பட்டதாக சிப்பாங் நகராண்மை கழகம் தெரிவித்தது.
அதில், உரிமம் இன்றி விளம்பரங்களை காட்சிப்படுத்தியதற்காக 2007ஆம் ஆண்டு சிப்பாங் நகராண்மை கழக விளம்பர துணைச் சட்டப் பிரிவு 7இன் கீழும், பொது இடங்களில் வணிகப் பொருட்களை வைத்ததற்காக 1974ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டம் பிரிவு 46(1)(d) கீழும் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
மேலும், உரிமம் காலாவதியான நிலையில் இருந்ததற்காக 2007ஆம் ஆண்டு சிப்பாங் நகராண்மை கழக வர்த்தக, வணிக மற்றும் தொழில் உரிமம் துணைச் சட்டப்பிரிவு 6இன் கீழும், மாநகர சபையின் செல்லுபடியாகும் உரிமம் இன்றி வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக அதே துணைச் சட்டப்பிரிவு 3இன் கீழும் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன.
“சட்டங்களைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான வணிக சூழலை உருவாக்குவதற்காகவும், சிப்பாங் நகராண்மை கழகம் தொடர்ச்சியாக அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


