ஷா ஆலம், 29 மார்ச்: BUDI95 தகுதியைத் தற்காலிகமாகச் சரிசெய்து, மானிய விலையிலான RON95 பெட்ரோலின் விலையை லிட்டருக்கு RM1.99 ஆகவே நீட்டிக்கும் அரசாங்கத்தின் முன்கூட்டிய நடவடிக்கை, தற்போதைய சவால்களைக் கையாள்வதில் அதன் அக்கறையை நிரூபிக்கிறது.

இந்த நடவடிக்கை, கிட்டத்தட்ட 90 விழுக்காடு மக்களைச் செலவு உயர்வின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, நிச்சயமற்ற உலகளாவிய சூழலில் எரிசக்தி விநியோகம் சீராக இருப்பதையும் உறுதிசெய்கிறது என்று காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் கூறினார்.
"இந்த உதவி, பயனாளிகளின் அன்றாட வாழ்க்கைக்கு ஆதரவளிப்பதுடன், விவசாயம் மற்றும் மூலப்பொருள் போன்ற முக்கியத் துறைகள் சீராகச் செயல்படுவதையும் உறுதி செய்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
"மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல்களால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, மலேசியா உட்பட உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது."
"எரிபொருள் மானியம் மாதத்திற்கு RM3.2 பில்லியனிலிருந்து RM4 பில்லியனாக உயர்ந்திருப்பதும், இன்றைய அரசாங்கம் , மக்களின் நலனை காக்க பெரும் நிதிச்சுமையை சுமக்க முனைந்திருப்பது அது மக்களின் நலனில் கொண்டுள்ள அக்கறையும் தெளிவாகக் காட்டுகிறது," என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மானியம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் முயற்சிகளைக் கைவிடாமல், முக்கியப் பொருளாதாரத் துறைகளின் தேவைகள் மீது அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையை, இ-ஹெய்லிங் துறைக்கான சிறப்பு வரம்பை நீட்டிக்கும் முடிவு மற்றும் சபா, சரவாக், லபுவானில் டீசல் நிரப்புவதைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தும் முடிவு காட்டுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
"ஒவ்வொரு ரிங்கிட் மானியமும் உண்மையிலேயே தேவைப்படுபவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கு, அமலாக்கம் பலப்படுத்தப்படுவது ஒரு முக்கியமான படியாகும்."
"பொருளாதார ஸ்திரத்தன்மை நாட்டின் அமைதியுடன் நெருங்கிய தொடர்புடையது. நிச்சயமற்ற உலகளாவிய சூழலில், மக்களின் ஒற்றுமையே முக்கியப் பாதுகாப்புக் கவசமாக விளங்குகிறது. முறைகேடுகளைப் புகாரளிக்கும் மக்களின் பொறுப்பான அணுகுமுறை, ஒற்றுமை உணர்வு இன்னும் வலுவாக இருப்பதைக் காட்டுகிறது."
"உதாரணமாக, பெட்ரோல் நிலையங்களில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள், அதாவது சில வாகனங்கள் மூலம் அதிக அளவில் RON95 மீண்டும் மீண்டும் நிரப்பப்படுவது போன்றவை கடத்தல் அல்லது முறைகேட்டுக்காக இருக்கலாம் எனச் சந்தேகப்பட்டு உடனடியாகப் புகாரளிக்கும் மக்கள் உள்ளனர்," என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் தேசிய ஒற்றுமைப் பிரிவின் தலைவருமான டேவிட் சியோங், வளங்களைப் பயன்படுத்துவதில் தொடர்ந்து ஒன்றுபட்டு, ஒழுக்கத்துடனும் விவேகத்துடனும் இருக்குமாறு அனைத்து மக்களையும் கேட்டுக்கொண்டார்.
"இந்த நடவடிக்கைகள் நிரந்தரமானவை அல்ல, மாறாக இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாடு நிலையானதாகவும், அமைதியாகவும், மீள்திறன் கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு கூட்டு முயற்சியாகும்," என்றார் அவர்.
வியாழக்கிழமை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஏப்ரல் 1 முதல், BUDI95 தகுதி மாதத்திற்கு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகத் தற்காலிகமாகச் சரிசெய்யப் படும் என்ற புதிய நடவடிக்கையை அறிவித்தார்.
இருப்பினும், நிதியமைச்சருமான அன்வார், மானிய விலையிலான RON95 மற்றும் சபா, சரவாக் மற்றும் லபுவானில் மானிய விலையிலான டீசல் விலை முறையே லிட்டருக்கு RM1.99 மற்றும் RM2.15 ஆகவே நீடிக்கும் என்று கூறினார்.








