ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் ஏப்ரல் 6 வரை ஒத்திவைப்பதாக டிரம்ப் தெரிவித்தார்

27 மார்ச் 2026, 10:00 AM
ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் ஏப்ரல் 6 வரை ஒத்திவைப்பதாக டிரம்ப் தெரிவித்தார்

வாஷிங்டன், மார்ச் 27: பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காரணம் காட்டி, ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்கான காலக்கெடுவை ஏப்ரல் 6 வரை ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று தெரிவித்தார்.

"ஈரான் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, எரிசக்தி ஆலைகளை அழிப்பதற்கான காலக்கெடுவை 10 நாட்களுக்கு, அதாவது ஏப்ரல் 6, 2026, திங்கட்கிழமை, கிழக்கு நேரப்படி இரவு 8 மணி வரை நான் ஒத்திவைக்கிறேன் என்பதை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது," என்று டிரம்ப் தனது 'டிரூத் சோஷியல்' தளத்தில் எழுதினார்.

"பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. போலிச் செய்தி ஊடகங்கள் மற்றும் பிற தரப்பினரின் தவறான அறிக்கைகள் இருந்தபோதிலும், அவை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன," என்றும் அவர்.

ஈரானுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு அமெரிக்கா தயாராக உள்ளதா என்பது குறித்து டிரம்ப் முன்னதாக நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்தியிருந்தார், இருப்பினும் தெஹ்ரான் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக இருப்பதாக அவர் கூறினார்.

"அவர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் மிகவும் புத்திசாலிகள், அவர்கள் சிறப்பாகப்
பேரம் பேசுபவர்கள்," என்று வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் கூறினார். இருப்பினும், ஈரானியர்களை "போரில் பலவீனமானவர்கள்" என்றும் அவர் விவரித்தார்.

ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்காகக் "கெஞ்சுகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"அவர்கள் சிறந்த பேரம் பேசுபவர்கள், ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்காக கெஞ்சுகிறார்கள். அதை நம்மால் செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் அதைச் செய்ய
முடியுமா என்றும் எனக்குத் தெரியவில்லை," என்றார் அவர்.

ஈரானின் முழுத் தலமைத்துவத்தையும் அழித்துவிட்டதாகவும், தப்பிப்பிழைத்தவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் டிரம்ப் பெருமிதம் கொண்டார்.

தெஹ்ரானுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்குத் "அவசரப்படவில்லை" என்பதைக் குறிப்பிட்ட அவர், "உண்மையில், நாங்கள் பின்வாங்குவதற்கு முன்பு தாக்க விரும்பும் மற்ற இலக்குகள் எங்களிடம் உள்ளன. நாங்கள் ஒவ்வொரு நாளும் தாக்குவோம்," என்றார்.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டாகத் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து பிராந்தியத்தில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் அப்போதைய உச்சகட்ட தலைவர் அயதுல்லா அலி காமெனி உட்பட 1,340-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு பதிலடியாக, ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்ட வளைகுடா நாடுகளைக் குறிவைத்தது.

இந்த மோதல்கள் தொடங்கியதிலிருந்து 13 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டதுடன், 290 பேர் காயமடைந்துள்ளனர்.

- பெர்னாமா-அனடோலு

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.