ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 350-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஈரானின் அனுமதிக்காகக் காத்திருப்பு

27 மார்ச் 2026, 8:30 AM
ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 350-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஈரானின் அனுமதிக்காகக் காத்திருப்பு

தெஹ்ரான், மார்ச் 27: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் இன்று 27-வது நாளை எட்டியுள்ள நிலையில், தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முடியாமல் 350-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஈரானிய இராணுவத்தின் அனுமதிக்காகக் காத்திருப்பதாக ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள இந்த கடல் வழிப்பாதை, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளுக்குத் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதாகவும், ஈரானின் நேரடி அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் அந்தப் பகுதியைக் கடக்க முடியாது என்றும் சின்ஹுவா செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போதைய கள நிலவரங்களின்படி, அங்கு காத்திருக்கும் கப்பல்கள் அனைத்தும் தங்களது தகவல் தொடர்பு அமைப்புகளை (Systems) அணைத்துவிட்டு, ஒரே இடத்தில் நிற்குமாறு ஈரானிய அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு முடங்கிக் கிடக்கும் கப்பல்களில் 25 சூப்பர் டேங்கர்கள், 200 எண்ணெய் ஏற்றிச் செல்லும் டேங்கர்கள் மற்றும் 70 எல்.என்.ஜி (LNG), சி.என்.ஜி (CNG) எரிவாயுக் கப்பல்களும் அடங்கும்.

ஈரானிய ஆயுதப் படைகளின் கடுமையான கண்காணிப்பில் இந்த நீர்வழிப்பாதை இருப்பதால், அவர்களின் பச்சைக்கொடி காட்டப்படாமல் எந்தவொரு கப்பலும் பயணத்தைத் தொடரவோ அல்லது பிராந்தியத்தில் உள்ள மற்ற துறைமுகங்களில் நங்கூரமிடவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சமூக ஊடகமான 'X' தளத்தில் பதிவிட்டுள்ள ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரேசா டாங்சிரி, ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் அனைத்துக் கப்பல்களும் ஈரானிய கடல்சார் அதிகாரிகளுடன் முழுமையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இந்த பதற்றமான சூழலுக்குக் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தெஹ்ரான் உள்ளிட்ட ஈரானின் முக்கிய நகரங்கள் மீது நடத்திய தாக்குதல்களே காரணமாகும்.

அந்தத் தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்சத் தலைவர் அலி காமேனி மற்றும் மூத்த இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதுடன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குச் சொந்தமான அல்லது ஆதரவான கப்பல்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தியில் தனது பிடியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.