ஷா ஆலம், மார்ச் 20 – தென்கிழக்காசியப் பிராந்தியத்தின் முதன்மைச் சுற்றுலாத் தலமாகச் சிலாங்கூர் மாநிலத்தை நிலைநிறுத்தும் நோக்கில், ஜப்பான் நாட்டுடன் புதிய ஒத்துழைப்புகளை ஏற்படுத்த 'டூரிசம் சிலாங்கூர்' அமைப்பு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக, ஜப்பானின் ஃபுக்குய் (Fukui) மாகாணத்தைச் சேர்ந்த அரசுப் பிரதிநிதிகள் குழுவினர், கடந்த மார்ச் 17-ஆம் தேதி ஷா ஆலமில் உள்ள டூரிசம் சிலாங்கூர் அலுவலகத்திற்கு அதிகாரப்பூர்வ வருகை புரிந்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் துறை உறவுகளை மேம்படுத்துவதையும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தச் சந்திப்பு அமைந்தது.
டூரிசம் சிலாங்கூர் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி சுவா யீ லிங் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுற்றுலாத்துறையின் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது மற்றும் மூலோபாயக் கூட்டணிகளை உருவாக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், இரு நாடுகளுக்கு இடையே கலாச்சாரப் பரிமாற்றங்களைச் சாத்தியப்படுத்துவது மற்றும் சர்வதேச அளவில் சிலாங்கூர் மற்றும் ஃபுக்குய் ஆகிய இரு இடங்களின் ஈர்ப்புத்தன்மையை அதிகரிக்கும் கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அந்த அமைப்பு தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
உலகளாவிய அளவில் தனது தொடர்புகளை விரிவுபடுத்துவதன் மூலம், சிலாங்கூர் மாநிலத்தைச் சிறந்த சுற்றுலா மையமாக மாற்றுவதில் டூரிசம் சிலாங்கூர் உறுதியுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னதாகக் கருத்துரைத்த சுவா யீ லிங், 'மலேசியா வருகை ஆண்டு 2026' (Visit Malaysia 2026) தேசியத் திட்டத்தோடு இணைந்து, 'சிலாங்கூர் வருகை ஆண்டு' (Visit Selangor) பிரச்சாரமும் இந்த ஆண்டு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று கூறினார்.
இத்தகைய தொடர்ச்சியான விளம்பர நடவடிக்கைகள் மூலம் மாநிலத்தின் சுற்றுலாத் துறை நிலையான வளர்ச்சியை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.







