குவா மூசாங், மார்ச் 19 - பகாங்கின் கோல லிப்பிஸ்-குவா மூசாங் சாலை வழியாக கிளந்தானுக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்ததைத் தொடர்ந்து, பல முக்கிய இடங்களில் காவல்துறை மூன்று முறை போக்குவரத்தைச் சீரமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது.
குவா மூசாங் மாவட்ட காவல் துறைத் தலைவர், சூப்பரின்டெண்டன்ட் சிக் சூன் ஃபூ கூறுகையில், பகாங், மெராப்போ எல்லையில் உள்ள கம்போங் மெந்தாரா, மஸ்ஜித் புலோவிற்கு அருகிலுள்ள குவா மூசாங்-கோல கிராய் பாதை மற்றும் ஜாலான் பெர்சியாரான் ராயா ஆகிய இடங்களில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது என்றார்.
"இன்று பிற்பகலில், நாங்கள் இரண்டு முறை போக்குவரத்தைச் சீரமைத்தோம். இரவில், போக்குவரத்து நெரிசல் மேலும் மோசமடைவதைத் தடுக்க மீண்டும் ஒருமுறை போக்குவரத்தைச் சீரமைத்தோம்," என்று அவர் கூறினார்.
"போக்குவரத்தைச் சீரமைப்பதைத் தவிர, காவல்துறை உறுப்பினர்கள் மாவட்டத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளிலும் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்," என்று இன்று பெர்னாமாவிடம் தொடர்பு கொண்டபோது அவர் தெரிவித்தார்.
சிக் கூறுகையில், சம்பந்தப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் பாதுகாப்பாக போக்குவரத்தை நகர்த்த வேண்டியிருப்பதால், இந்தச் செயல்முறைக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது என்றார்.
இருப்பினும், இங்குள்ள கெம் செமூர் அருகே குவா மூசாங்-கோல கிராய் சாலையில் போக்குவரத்து சற்று சீராக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், கோல கிராய் மாவட்டத்தை உள்ளடக்கிய சில முக்கிய கூட்டரசு சாலைகளில் பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில், இன்று இரவு 10.30 மணி நிலவரப்படி போக்குவரத்து சீராகவும் கட்டுப்பாட்டுடனும் இருந்தது தெரியவந்தது.
-- பெர்னாமா
நோன்புப் பெருநாள்: குவா மூசாங்கில் கடும் நெரிசல், மூன்று முறை போக்குவரத்து சீரமைப்பு - காவல்துறை
19 மார்ச் 2026, 6:15 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?



