கெடா மாநில அரசு அறிவிப்பு: ஈகைத் திருநாளை முன்னிட்டு திங்கட்கிழமை கூடுதல் பொது விடுமுறை

19 மார்ச் 2026, 3:22 AM
கெடா மாநில அரசு அறிவிப்பு: ஈகைத் திருநாளை முன்னிட்டு திங்கட்கிழமை கூடுதல் பொது விடுமுறை

அலோர் ஸ்டார்: கூட்டரசு அரசாங்கத்தின் முடிவுக்கு ஏற்ப, கெடா மாநில அரசு ஈகைத் திருநாளை முன்னிட்டு வரும் திங்கட்கிழமை, மார்ச் 23ஆம் தேதியை கூடுதல் பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

ஷவால் மாதம் முதல் நாள் வெள்ளிக்கிழமையோ அல்லது சனிக்கிழமையோ, எத்தினத்தில் வந்தாலும் இந்த கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முஹம்மது சனுசி முகமது நோர் கூறினார்.

"கூட்டரசு அரசாங்கம் அறிவித்ததைப் பின்பற்றுவதென நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என்று இன்று இங்கு நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

கெடா மாநிலத்திற்கான 1951ஆம் ஆண்டு பொது விடுமுறை சட்டத்தின் பிரிவு 9-இன் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சனுசி குறிப்பிட்டார்.

ஈகைத் திருநாள் மார்ச் 20, வெள்ளிக்கிழமை அன்று வந்தால், மார்ச் 23 திங்கட்கிழமை கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என்றும், அல்லது ஷவால் முதல் நாள் மார்ச் 21 சனிக்கிழமை அன்று வந்தால், வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படும் என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக அறிவித்திருந்தார்.

இதனிடையே, கெடா மந்திரி பெசாரின் ஈகைத் திருநாள் திறந்த இல்ல உபசரிப்புக்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டதால், அது திட்டமிட்டபடி மார்ச் 27ஆம் தேதி தொடரும் என்று சனுசி கூறினார்.

அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் சார்ந்த நிறுவனங்களுடன் (GLC) இணைந்து கூட்டுப்பணி முறையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுவதால், அதிக நிதி சம்பந்தப் பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

மற்றொரு நிலவரத்தில், ஷரிக்காட் Air Darul Aman (SADA) நிறுவனத்தின் அவசரகாலத் திட்டம், பண்டிகைக் காலங்களில் மாநிலத்தில் ஏற்படும் தண்ணீர் விநியோகத் தடையைக் குறைக்க வெற்றி கண்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் பயனீட்டாளர் புகார்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இது செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் செயல்திறனை நிரூபிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

"கூடுதல் நீர்த் தொட்டிகள், பூஸ்டர் பம்புகள் மற்றும் முறையான விநியோகம் போன்ற கூடுதல் வசதிகளை வழங்குவது இத்திட்டத்தில் அடங்கும்," என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.