சிலாங்கூர் 'துனாஸ்' பாலர் பள்ளி உதவித்தொகை: 2026-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன

16 மார்ச் 2026, 4:07 AM
சிலாங்கூர் 'துனாஸ்' பாலர் பள்ளி உதவித்தொகை: 2026-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன

ஷா ஆலம், மார்ச் 16: 2026-ஆம் ஆண்டுக்கான 'துனாஸ்' (TUNAS) பாலர் பள்ளி உதவித்தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

சிலாங்கூர் குழந்தைகள் மரபு அறக்கட்டளை (யாவாஸ்) வாயிலாகச் செயல்படுத்தப்படும் இத்திட்டம், பாலர் பள்ளி மாணவர்களின் மாதாந்திரக் கட்டணத்தில் 50 ரிங்கிட்டை மானியமாக வழங்குகிறது.

இந்தச் சலுகையைப் பெறுவதற்கு மாணவர்கள் ஐந்து அல்லது ஆறு வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பெற்றோரில் ஒருவர் சிலாங்கூர் மாநிலத்தின் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருப்பதோடு, அக்குழந்தை சிலாங்கூரில் பிறந்தவராகவோ அல்லது வசிப்பவராகவோ இருக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும், விண்ணப்பதாரர் குடும்பத்தின் மொத்த மாத வருமானம் 5,000 ரிங்கிட்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக, அக்குழந்தை கல்வி அமைச்சு, சிலாங்கூர் இஸ்லாமிய மத விவகாரத் துறை (JAIS), தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புத் துறை அல்லது கெமாஸ் (KEMAS) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட பாலர் பள்ளியில் பயில்வது அவசியமான நிபந்தனையாகும்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் அடையாள அட்டை நகல், வாக்காளர் பதிவுச் சான்று, வருமானச் சான்றிதழ் அல்லது சம்பளப் பட்டியல் மற்றும் பாலர் பள்ளியில் பதிவு செய்ததற்கான ரசீது ஆகிய ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஒற்றைப் பெற்றோர் அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் போன்ற சிறப்புச் சூழலில் உள்ளவர்கள், அதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கடிதங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியுள்ள பெற்றோர்கள் tunas.yawas.com.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

2026-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக 2 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 3,700 சிறுவர்கள் இந்த மாதாந்திரக் கல்வி மானியத்தால் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.