சுபாங் ஜெயா, மார்ச் 16: எதிர்வரும் ஹரிராயா ஐடில்ஃபித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஸ்ரீ செர்டாங் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 800 குடியிருப்பாளர்களுக்கு தலா 200 ரிங்கிட் மதிப்பிலான 'ஜோம் ஷோப்பிங்' வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 50 விழுக்காட்டினர் 18 முதல் 40 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் என ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் சலிமி அஸ்மி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இத்தொகுதியிலிருந்து மொத்தம் 2,000 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தகுதிக்கேற்ப வருமான வரம்பு மற்றும் இதர மாநில அரசு உதவிகளான SMUE அல்லது பிங்காஸ் போன்ற திட்டங்களின் கீழ் உதவி பெறாத 800 பேர் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.
ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள NSK 3 Elements கடையில் நடைபெற்ற இந்த வவுச்சர் வழங்கும் நிகழ்வில், சுமார் 400 வவுச்சர்கள் இளைஞர்களுக்கும், 150 முதல் 200 வரையிலான வவுச்சர்கள் இ-ஹெய்லிங் (e-hailing) ஓட்டுநர்களுக்கும் பிரத்யேகமாக வழங்கப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.
இதே நிகழ்வில், சிலாங்கூர் மாநிலப் பெண்கள் மற்றும் நலன்புரி அறக்கட்டளையான 'பெக்காவானிஸ்' (Pekawanis) சார்பில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 20 பெண்களுக்கு தலா 150 ரிங்கிட் ரொக்க உதவியும் வழங்கப்பட்டது. சிலாங்கூர் மாநில மந்திரி புசாரின் மனைவியும், பெக்காவானிஸ் தலைவருமான டத்தின் ஸ்ரீ மஸ்தியானா முகமட் அவர்களின் முன்னெடுப்பில், உதவி தேவைப்படும் பெண்களுக்குக் ஆதரவு வழங்கும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டதாக அப்பாஸ் சலிமி தெரிவித்தார்.
இதற்கிடையில், ஒட்டுமொத்தமாக, இவ்வாண்டு சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 40,400 'ஜோம் ஷோப்பிங்' வவுச்சர்கள் தகுதியுள்ள நபர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதற்காக மாநில அரசு சுமார் 8.08 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது என வறுமை ஒழிப்புத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி. பாப்பாராய்டு தெரிவித்தார்.








