கப்பாலா பாத்தாஸ், மார்ச் 13: இங்குள்ள கம்போங் குவார் கெப்பாயாங்கில் அமைந்துள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி மூதாட்டி ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) இயக்குனர் முகமது ஷோக்கி ஹம்சா கூறுகையில், மாலை 4.59 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும், கெப்பாலா பாத்தாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து முதல் வாகனம் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார்.
"தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. 298 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த வீடு சுமார் 70 விழுக்காடு சேதமடைந்தது," என்று அவர் கூறினார்.
"வீட்டிற்குள் ஒருவர் சிக்கியிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. பின்னர், மாலை 5.55 மணியளவில் ஒரு அறையில் உடல் கருகிய நிலையில் பாதிக்கப் பட்டவர் கண்டெடுக்கப் பட்டார்.
இருப்பினும், அவரது அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மாலை 5.40 மணியளவில் தீ மற்ற வீடுகளுக்குப் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.





