கோத்தா பாரு,மார்ச் 13, கடந்த செவ்வாய்க்கிழமை, கோல கிராய் மற்றும் தானா மேரா மாவட்டங்களில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி சோதனைகளில், RM2.6 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வரி செலுத்தப்படாத கடத்தல் சிகரெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், ஒரு பெரிய கடத்தல் நடவடிக்கையை போலீஸார் முறியடித்துள்ளனர்.
கிளாந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் கூறுகையில், காலை 9.30 மணிக்கு நடந்த முதல் சோதனையில், கோல கிராய்–குவா மூசாங் சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்றுகொண்டிருந்த வெள்ளை நிற நிசான் யுடி பாண்டட் லோரி ஒன்றை அதிரடிப் படையினர் தடுத்து நிறுத்தியதாகத் தெரிவித்தார்.
"கோல கிராய், கி.மீ 15, பெரியா தேசியப் பள்ளிக்கு முன்பாக JLD 4461 என்ற பதிவு எண் கொண்ட அந்த வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டது. லோரியின் பின்புறத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கோணிப்பைகளால் சுற்றப்பட்டிருந்த பெட்டிகளின் குவியல்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அவற்றில் பல்வேறு வர்த்தக முத்திரைகளைக் கொண்ட வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் இருந்தன," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
முகமட் யூசோஃப் மேலும் கூறுகையில், கோல கிராயில் பறிமுதல் செய்யப்பட்ட 300 பெட்டிகளில் இருந்த 30,56,000 சிகரெட்டுகளின் மொத்த மதிப்பு RM2,688,432 என மதிப்பிடப் பட்டுள்ளது. இது தொடர்பாக, 50 வயதுடைய லோரி ஓட்டுநர் ஒருவர் விசாரணைக்கு உதவுவதற்காகக் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், அதே நாளில் பிற்பகல் 2 மணியளவில் தானா மேராவில் நடந்த மற்றொரு சோதனையில், கிளாந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தின் (IPK) குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு விசாரணைக் கிளை (D9) அதிகாரிகள் அடங்கிய குழு, ஒரு வீட்டைச் சோதனையிட்டு மற்றொரு ஆடவரைக் கைது செய்தது.
"வீட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில், U2 முத்திரை கொண்ட வரி செலுத்தப்படாத இரண்டு பெட்டி சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு பெட்டியில் 50 கார்ட்டன் சிகரெட்டுகள் இருந்தன.
மேலும், ரெட்மி மற்றும் ஐபோன் ரக இரண்டு கைபேசிகளையும் சிம் கார்டுகளுடன் போலீஸார் பறிமுதல் செய்தனர். தானா மேரா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் RM7,000 ஆகும்," என்றார்.
இரண்டு வழக்குகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் பகுப்பாய்வுக்காக மலேசிய வேதியியல் துறைக்கு அனுப்பப்படும் என்று முகமட் யூசோஃப் கூறினார்.
வரி செலுத்தப்படாத பொருட்களை வைத்திருத்தல் மற்றும் கையாளுதல் குற்றத்திற்காக சுங்க வரிச் சட்டம் 1967-இன் பிரிவு 135(1)(e) மற்றும் சுங்க வரி செலுத்தப் படாத அல்லது இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைத்திருத்தல் குற்றத்திற்காக அதே சட்டத்தின் பிரிவு 135(1)(d) ஆகியவற்றின் கீழ் இந்த இரண்டு வழக்குகளும் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன.







