கோலாலம்பூர், மார்ச் 13: மலேசியாவின் எல்லைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் சுமார் 540 சட்டவிரோத வழித்தடங்கள் (Lorong Tikus) நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச மலேசியக் காவல்துறைத் தலைவர் (IGP) டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான புள்ளிவிவரங்களின்படி, அடையாளம் காணப்பட்ட இந்த வழித்தடங்களில் 360 தரைவழிப் பாதைகளும், 224 கடல்வழிப் பாதைகளும் அடங்கும். கோலாலம்பூர், பினாங்கு, திரங்கானு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து, நாட்டின் மற்ற 10 மாநிலங்களில் இந்த ரகசியப் பாதைகள் பரவியுள்ளன.
சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் முன்னிலையில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறப்பு நிகழ்வில், டத்தோஸ்ரீ முகமட் காலித்தின் உரையை புக்கிட் அமான் சிறப்புப் பிரிவின் துணை இயக்குநர் எஸ்.ஏ.சி ஷைதாதுல் அக்மார் முகமட் நூர் வாசித்தார்.
அப்போது பேசிய அவர், "மலேசியா தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, புருணை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் விரிவான நில மற்றும் கடல் எல்லைகளைக் கொண்டுள்ளது. தென் சீனக்கடல் மற்றும் சூலு கடல் போன்ற சர்வதேச நீர்நிலைகளும் இதில் அடங்கும். இந்த எல்லைப் பகுதிகள் சட்டபூர்வமான வர்த்தகத்திற்கும் மக்கள் நடமாட்டத்திற்கும் பயன்படுத்தப்பட்டாலும், துரதிர்ஷ்டவசமாக எல்லை கடந்த குற்றச் செயல்களுக்காகவும் இவை சுரண்டப்படுகின்றன," என்று கவலை தெரிவித்தார்.
எல்லைப் பாதுகாப்பைப் பேணுவதில் பல்வேறு சவால்கள் இருந்தாலும், அரச மலேசியக் காவல்துறை (PDRM) மிகவும் விரிவான மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு உத்திகளைக் கையாண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். முன்கூட்டியே தடுத்தல், தீவிர அமலாக்கம், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் நிலையான பாதுகாப்பு மேலாண்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் எல்லைகள் பாதுகாக்கப்படுகின்றன.
"இந்தச் சட்டவிரோத வழித்தடப் பிரச்சனையைச் சமாளிக்க, நிலம், ஆறு மற்றும் கடல் பகுதிகளில் மற்ற பாதுகாப்பு முகமைகளுடன் இணைந்து காவல்துறை ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதே வேளையில், வெளிநாட்டுப் பாதுகாப்பு அமைப்புகளுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதும், அமலாக்க ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது," என்று அவர் மேலும் விளக்கினார்.
நவீன கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள் மற்றும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், வளர்ந்து வரும் புதிய அச்சுறுத்தல்களைத் திறம்பட எதிர்கொள்ள மலேசியா தனது பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, மலேசியா ஒரு பாதுகாப்பான நாடாகத் தொடர்ந்து திகழும் என்றும் காவல்துறைத் தலைவர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.








