அல்-அக்ஸா மசூதி வளாகத்தின் நுழை வாயில்களை மூடுவதை உடனடியாக நிறுத்துமாறு பெரும்பான்மை முஸ்லிம் மக்கள் வசிக்கும் எட்டு நாடுகள் கோரிக்கை 

12 மார்ச் 2026, 7:32 AM
அல்-அக்ஸா மசூதி வளாகத்தின் நுழை வாயில்களை மூடுவதை உடனடியாக நிறுத்துமாறு பெரும்பான்மை முஸ்லிம் மக்கள் வசிக்கும் எட்டு நாடுகள் கோரிக்கை 

ஜாகர்த்தா, மார்ச் 12: அல்-அக்ஸா மசூதி வளாகத்தின் நுழைவாயில்கள் மூடுவதை உடனடியாக நிறுத்துமாறு பெரும்பான்மை முஸ்லிம் மக்கள் வசிக்கும் எட்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக ரமலான் மாதத்தில், முஸ்லிம்களுக்கு அப்பகுதியை மூடும் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தோனேசியா, எகிப்து, ஜோர்டான், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஒரு கூட்டறிக்கையில், பழைய ஜெருசலேம் நகருக்கு அணுகல் மீதான கட்டுப் பாடுகளை நீக்குமாறும், முஸ்லிம்கள் மசூதிக்குள் நுழைவதைத் தடுக்க வேண்டாம் என்றும் இஸ்ரேலைக் கேட்டுக்கொண்டனர்.

ஜெருசலேமில் உள்ள இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ புனிதத் தலங்களுக்கு எதிரான சட்டவிரோத நடைமுறைகள் மற்றும் தொடர்ச்சியான மீறல்களை நிறுத்த இஸ்ரேலை நிர்ப்பந்திக்க, அனைத்துலக சமூகம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

சட்டவிரோத மற்றும் நியாயமற்ற நடவடிக்கைகள் என வர்ணிக்கப் பட்டதை அவர்கள் முழுமையாக நிராகரிப்பதாகவும், முஸ்லிம்களுக்கு எதிரான தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் செயல்களைக் கண்டிப்பதாகவும் அனைத்து வெளியுறவு அமைச்சர்களும் வலியுறுத்தினர். ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேம் அல்லது இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ புனிதத் தலங்கள் மீது இஸ்ரேலுக்கு எந்த இறையாண்மையும் இல்லை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.

"பழைய ஜெருசலேம் நகரம் மற்றும் அதன் வழிபாட்டு தலங்களுக்கான அணுகல் மீதான பாதுகாப்பு கட்டுப்பாடுகள், மற்றும் பிற வழிபாட்டு தலங்களுக்கான பாரபட்சமான மற்றும் தன்னிச்சையான கட்டுப்பாடுகள் ஆகியவை அனைத்துலகச் சட்டம், அனைத்துலக மனிதாபிமானச் சட்டம், வரலாற்று மற்றும் சட்டப்பூர்வ நிலைப்பாடு, மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான தடையற்ற அணுகல் கொள்கை ஆகியவற்றை அப்பட்டமாக மீறுவதாகும்," என்று அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசிய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

144 துனாம் (144,000 சதுர மீட்டர்) பரப்பளவு கொண்ட அல்-அக்ஸா மசூதி யின் முழுப் பகுதியும் முஸ்லிம்களுக்கான பிரத்யேக வழிபாட்டுத் தலம் என்பதை அனைத்து வெளியுறவு அமைச்சர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.

ஜோர்டானின் வக்ஃப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஜெருசலேம் வக்ஃப் மற்றும் அல்-அக்ஸா மசூதி விவகாரங்கள் துறை, அதன் விவகாரங்களை நிர்வகிப்பதற்கும் அப்பகுதிக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்கும் பிரத்யேக அதிகார வரம்பைக் கொண்ட ஒரே சட்டப்பூர்வ அமைப்பு என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.