சுங்கை பூலோ மார்ச் 11: நாட்டில் இன மற்றும் மத ரீதியிலான வெறுப்புணர்வைத் தூண்டும் நபர்கள் தொடர்பான விவகாரத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்ப உள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை என்றாலும், இந்த விவகாரம் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்படும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
"இன்று புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் நான் இந்த விவகாரத்தை முன்வைப்பேன். இது நிச்சயமாக விவாதிக்கப்படும்," என்று அவர் கூறினார்.
சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோ (PERKESO), முன்னாள் ராணுவத்தினர் விவகாரக் கழகம் (PERHEBAT) மற்றும் ராணுவ வீரர் விவகாரத் துறை (JHEV) ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், சில தரப்பினரால் திட்டமிட்டுத் தூண்டப்படும் இனவாதப் போக்குகள் குறித்துத் தமது கவலையை வெளிப்படுத்தினார். இத்தகைய செயல்களில் ஈடுபட்ட நபர்களைக் காவல்துறை ஏற்கெனவே கைது செய்துள்ளதாகவும் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
“நேற்று சிலர் கைது செய்யப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் தொடரும். காவல்துறை விசாரணை நடத்துவதற்கும், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் நாம் அவகாசம் வழங்க வேண்டும்.”
ரமணன், இனவாதத்தை தூண்டும் விவகாரத்தை அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டு செல்கிறார்
11 மார்ச் 2026, 2:47 AM
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?






