சிப்பாங் மார்ச் 7ந- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) முனையம் 1-இல் சட்டவிரோத வாடகைக் கார் சேவையை வழங்கி வந்ததாக நம்பப்படும் ஓட்டுநர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) இயக்குனர் அஸ்ரின் போர்கான் கூறுகையில், கேஎல்ஐஏ அமலாக்கப் பிரிவினரின் தொடர் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியின் விளைவாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்.
அவரது கூற்றுப்படி, உரிமம் இல்லாமல் வாடகைக் கார் சேவையை வழங்கிய சந்தேகத்தின் பேரில் ஹோண்டா BR-V ரக காரும் அதன் ஓட்டுநரும் தடுத்து வைக்கப்பட்டனர்.
"முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் கேஎல்ஐஏ முனையம் 1-லிருந்து சிலாங்கூர், ரவாங்கிற்கு வங்காள தேசத்தைச் சேர்ந்த பயணி ஒருவரை அழைத்துச் செல்ல ரிங்கிட் 100 கட்டணத்திற்குப் பேசி ஒப்புதல் அளித்துள்ளார். அந்தப் பணத்தை சேருமிடத்தை அடைந்ததும் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளார்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மேல் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் தரைவழிப் பொதுப் போக்குவரத்துச் சட்டம் 2010 (APAD 2010), பிரிவு 205(1)-இன் கீழ் குற்றம் நிரூபிக்கப் பட்டால், ரிங்கிட் 50,000-க்கு மிகாமல் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று அஸ்ரின் தெரிவித்தார்.
மேலும், இந்த சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் இதே சட்டத்தின் பிரிவு 243(1)-இன் கீழ் குற்றம் சாட்டப் படலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.
எனவே, பொதுமக்கள் கேஎல்ஐஏ முனையம் 1 மற்றும் 2-இல் உள்ள அதிகாரப்பூர்வ மையங்கள் அல்லது இ-ஹெய்லிங் செயலிகள் மூலம் மட்டுமே முறையான போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறார்கள்.








