ஷா ஆலம், மார்ச் 5: காஜாங் நகராண்மைக் கழகத்தின் (MPKj) நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வடிகால்களில் குப்பைகள், உணவு எச்சங்கள் அல்லது சமையல் எண்ணெயைக் கொட்டும் வணிகர்களுக்கு 1,000 ரிங்கிட் அபராதமும் நீதிமன்ற நடவடிக்கையும் காத்திருக்கிறது.
பொதுச் சுகாதாரத்தைப் பேணுவதில் அலட்சியமாக இருந்து, வடிகால் அமைப்புகளில் அடைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் திடீர் வெள்ள ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் எவருக்கும் எதிராக எவ்வித சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளூர் நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.
தவறிழைக்கும் வணிகர்கள் மீது 1976-ஆம் ஆண்டு உள்ளூர் அரசாங்கச் சட்டம் (சட்டம் 171) மற்றும் MPKj-இன் கீழ் அமலில் உள்ள துணைச் சட்டங்களின்படி நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வணிகர்கள் தங்கள் உணவகங்களில் 'எண்ணெய் பிடிப்பான்களை' (Grease trap) முறையாகப் பொருத்திப் பராமரிக்க வேண்டும் என்றும், வணிக வளாகங்களின் பின்பகுதியை எப்போதும் தூய்மையாகவும் கழிவுகள் இல்லாமலும் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் MPKj வலியுறுத்தியுள்ளது.
"பொதுச் சுகாதாரம் என்பது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். வடிகால்கள் சீராக இயங்குவதையும், வணிக வளாகங்கள் பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் இருப்பதையும் உறுதி செய்வதில் வணிகர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்," என்று MPKj சுட்டிக்காட்டியுள்ளது.
இதே வேளையில், சுங்கை லோங் வணிகப் பகுதியில் வடிகால்களில் தேங்கியுள்ள சேறு, எண்ணெய் மற்றும் திடக்கழிவுகளை அகற்றிச் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்வது குறித்த காணொளி ஒன்றையும் MPKj பகிர்ந்துள்ளது.







