ஷா ஆலாம், பிப் 10: பெரானாங், தாமான் தாசேக் கெசுமாவில் இன்று நடைபெற்ற 'ரூட்ஸ் ஃபார் டுமாரோ' (Roots for Tomorrow) தொடக்க விழாவை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் மூலம் காஜாங் நகராண்மைக் கழகம் (MPKj) சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
மலேசிய பசுமை அறக்கட்டளை (YHM) மற்றும் KEB பெர்ஹாட் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. நகர்ப்புற பசுமைப் பகுதிகளை அதிகரிப்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த சமூக விழிப்புணர்வை வளர்ப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும் என்று அந்த உள்ளூராட்சி மன்றம் குறிப்பிட்டது.
"உள்ளூராட்சி மன்றம், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பெருநிறுவனத் துறையினர் ஒன்றிணைந்து, நீடித்த வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், சமூக மட்டத்தில் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைக் கையாளுவதற்கும் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பை இத்திட்டம் பிரதிபலிக்கிறது.
"நகர்ப்புற நில வடிவமைப்பு திட்டத்தின் கீழ், யூக்கலிப்டஸ் டெக்லுப்டா, ஹோப்பியா ஓடோராட்டா, கார்சீனியா சுபெலிப்டிகா மற்றும் சாலிக்ஸ் பாபிலோனிகா போன்ற பல்வேறு வகைகளைச் சேர்ந்த 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. இம்மரங்கள் சுற்றுப்புறச் சூழலின் தரத்தை மேம்படுத்துவதோடு, உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையையும் பேண உதவும்," என அது முகநூல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்நிகழ்ச்சியில், காஜாங் நகராண்மைக் கழகத்தின் நில வடிவமைப்பு மற்றும் பொழுதுபோக்குத் துறை இயக்குநர் நோரஸ்மான் அப்துல் ரஹீம், மலேசிய பசுமை அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி அஸ்லான் ஜமில் மற்றும் KEB பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வின்சன் லிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


