ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபதிடம் ஜப்பானியப் பிரதமர் விளக்கம் பெறுவார்

4 மார்ச் 2026, 8:45 AM
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபதிடம்  ஜப்பானியப் பிரதமர் விளக்கம்  பெறுவார்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபதிடம்  ஜப்பானியப் பிரதமர் விளக்கம்  பெறுவார்

டோக்கியோ, மார்ச் 3 (பெர்னாமா-கியோடோ) -- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் "திறந்த கலந்துரையாடல்" நடத்தவிருப்பதாக ஜப்பானியப் பிரதமர் சானே டகாயிச்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இந்த மாத இறுதியில் வாஷிங்டனில் நடைபெறவுள்ள உச்சநிலை மாநாட்டில் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என கியோடோ செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய டகாயிச்சி, கடந்த வார இறுதியில் நடத்தப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்து "சட்டப்பூர்வமான மதிப்பீட்டை தற்போதைக்குச் செய்ய முடியாது" என்று ஜப்பானிய அரசாங்கம் கருதுவதாகக் கூறினார்.

"விரிவான தகவல்கள்" இல்லாததால், இந்த இராணுவ நடவடிக்கை அனைத்துலகச் சட்டத்தை மீறியதா என்பது குறித்துக் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்து வருவதாக ஜப்பானிய அரசாங்கம் கூறியுள்ளது. அதே வேளையில், இந்தப் பிரச்சினைக்கு "ராஜதந்திர தீர்வைக்" காணுமாறு தெஹ்ரானை வலியுறுத்தியுள்ளது. மேலும் அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்துமாறும், அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களைக் கைவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மை ஜப்பானுக்கு மிகவும் முக்கியமானது. பாரம்பரியமாக ஈரானுடன் நல்லுறவைப் பேணி வரும் ஜப்பான், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாகவும் உள்ளது. வளங்கள் குறைவாக உள்ள ஆசிய நாடான ஜப்பான், கச்சா எண்ணெய் விநியோகத்திற்காக இப்பகுதியை வெகுவாகச் சார்ந்துள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தில், தற்போது நீடிக்கும் மோதல், உள்நாட்டு மின்சாரம் மற்றும் எரிவாயு விலைகளில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாது என்று டகாயிச்சி குறிப்பிட்டார். மார்ச் 31-ஆம் தேதியுடன் காலாவதியாகும் வீட்டுப் பயன்பாட்டுக் கட்டணங்களுக்கான மானியங்களைத் தொடர்வது குறித்து அரசாங்கம் "இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை" என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, ஜப்பானியக் கப்பல்கள் பாரசீக வளைகுடாவிலிருந்து விலகி இருக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாகத் தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா தெரிவித்தார்.

ஏற்கெனவே வளைகுடாவில் உள்ள கப்பல்கள் பாதுகாப்பான இடங்களில் நங்கூரமிடுமாறு போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஜலசந்தியின் மேற்குப் பகுதியில் உள்ள ஜப்பான் தொடர்புடைய கப்பல்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் கிஹாரா விளக்கினார்.

உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதா என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தி வருவதாகவும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.