ஷா ஆலாம், மார்ச் 3- ரவாங் கோயில் விவகாரம் தொடர்பாகப் பெறப்பட்ட பல புகார்களைத் தொடர்ந்து, அருண் துரைசாமி என்ற ஆடவரை வாக்குமூலம் அளிக்க சிலாங்கூர் போலீசார் அழைக்க உள்ளனர்.
அருண் துரைசாமியின் கருத்துக்களால் அதிருப்தி அடைந்த பல்வேறு தரப்பினரிடமிருந்து இதுவரை எட்டு புகார்கள் கிடைத்துள்ளதாக சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.
இந்த விவகாரம் முந்தைய கோயில் தொடர்பான புகார்களுடன் (ROR) இணைக்கப்பட்டு தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஷா ஆலம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், யாயாசான் குப்ராவுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த சட்டவிரோதக் கட்டடம் இடிக்கப்பட்டது குறித்து கோயில் நிர்வாகத்திடமிருந்து ஒரு புகாரைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
மற்றொரு முன்னேற்றமாக, சீனப் பிரஜையின் கிரிப்டோ கரன்சியைத் திருடியதாகக் கூறப்படும் 12 போலீசார் மீதான விசாரணை அறிக்கை சட்ட ஆலோசகரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் டிஜிட்டல் தடயவியல் அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும், தற்போது விசாரணை இன்னும் முழுமையடையவில்லை என்றும் டத்தோ ஷாசெலி விளக்கமளித்தார்.
விசாரணை வளையத்தில் இருக்கும் அந்த 12 போலீஸ் அதிகாரிகளும் தற்காலிகமாக களப் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு ஓய்வில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு விவகாரங்களிலும் சட்டத்தின் அடிப்படையில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் உறுதியளித்தார்.






