KWSP ஈவுத்தொகை சரிவுக்கு உலகளாவிய முதலீடுகளே காரணம், உள்நாட்டுப் பொருளாதாரம் அல்ல.

2 மார்ச் 2026, 7:31 AM
KWSP ஈவுத்தொகை சரிவுக்கு உலகளாவிய முதலீடுகளே காரணம், உள்நாட்டுப் பொருளாதாரம் அல்ல.

ஷா ஆலாம், மார்ச் 2: ஊழியர் சேமநிதி வாரியத்தின் (KWSP) 2025 நிதியாண்டுக்கான ஈவுத்தொகை 6.15 விழுக்காடாகக் குறைக்கப் பட்டது, உள்நாட்டுப் பொருளாதாரத்தின் பலவீனத்தால் அல்ல, மாறாக சர்வதேச முதலீடுகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையாலேயே இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.

பொருளியல் ஆய்வாளர், பேராசிரியர் எமெரிட்டஸ் டாக்டர் பர்ஜோய் பர்டாய் கூறுகையில், நாட்டின் பொருளாதாரம் இன்னும் ஊக்கமளிக்கும் நிலையில்தான் உள்ளது, ஆனால் KWSP-யின் 45 விழுக்காட்டிற்கும் அதிகமான முதலீடுகள் உலக அளவில் குவிந்துள்ளன என்றார்.

"KWSP முன்வைத்த காரணங்கள் ஏற்றுக்
கொள்ளக் கூடியவை. முதலாவதாக, அந்நியச் செலாவணி மாற்று விகிதம் குறைந்துள்ளது. அதேவேளையில் KWSP-யின் 45 விழுக் காட்டிற்கும் அதிகமான முதலீடுகள் அமெரிக்க டாலர் நாணயத்தை அடிப்படையாகக் கொண்டவை."

"இரண்டாவதாக, மலேசியப் பங்குச் சந்தை உயர்ந்தது. பங்குகளின் மதிப்பு உயரும்போது லாபமும் அதிகரிக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால், பங்குகளின் லாபம் 2.3 விழுக்காடாக மட்டுமே இருந்தது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

கடந்த சனிக்கிழமை, KWSP 2025-ஆம் ஆண்டுக்கான ஈவுத்தொகையை 6.15 விழுக்காடாக அறிவித்தது. இது முந்தைய ஆண்டில் வழங்கப்பட்ட 6.30 விழுக்காட்டை விட 0.15 விழுக்காடு குறைவாகும்.

KWSP-யின் தலைமைச் செயல்முறை அதிகாரி, அஹ்மத் சுல்கர்னைன் ஓன் கூறுகையில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் வலுப்பெற்றது, அந்த நாணயத்தில் மதிப்பிடப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் வருவாயைப் பாதித்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும், கணிக்க முடியாத வர்த்தகக் கொள்கைகள், வரிவிதிப்புப் பதற்றங்கள் மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் உள்ளிட்ட நிலையற்ற உலகளாவிய முதலீட்டுச் சூழலும் செயல்திறனைப் பாதித்ததாக அவர் கூறினார்.

இதற்கிடையில், மேற்கு ஆசியாவில் நெருக்கடி நீடித்து ஒரு பெரிய மோதலாக வெடித்தாலும், KWSP பெரிய அழுத்தங்களை எதிர்கொள்ளாது என்று டாக்டர் பர்ஜோய் கருதுகிறார்.

மலேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (MUST) மூத்த விரிவுரையாளரான அவர், KWSP பத்திரங்கள் மற்றும் சுக்குக் போன்ற நிலையான வருமானக் கருவிகளில் அதிகம் முதலீடு செய்வதாகவும், அவற்றின் அடிப்படை மதிப்பு மிகவும் நிலையானது என்றும் விளக்கினார்.

"ஒருவேளை மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால், சில பாதிப்புகள் இருக்கலாம். ஆனால் KWSP நிலையான வருமானக் கருவிகளில் அதிகம் முதலீடு செய்வதால், அதன் வருவாயில் ஒரு சிறிய பாதிப்பு மட்டுமே ஏற்படக்கூடும்," என்றார் அவர்.

#KWSP #EPF #DividenKWSP #EPFDividend2025 #EkonomiMalaysia #PelaburanGlobal #GlobalInvestment #BeritaTamil

original news :
https://mediaselangor.com/ms/2026/03/345854

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.