கிள்ளான், பிப் 27- மலேசிய இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட '2030 குறைந்த கரிம நகர சவால்' திட்டத்தில், கிள்ளான் அரச மாநகர மன்றம் (MBDK) தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள ஐந்து முக்கிய கட்டிடங்களுக்கு உயரிய வைர அங்கீகார விருதை வென்று சாதனை படைத்துள்ளது.
பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற்ற விழாவில், சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசப் குரூப் முன்னிலையில் இந்த விருதைப் பெற்றுக் கொண்டதுடன், இச்சவாலில் மிகவும் சுறுசுறுப்பாக செயல் பட்ட உள்ளூராட்சி மன்றத்திற்கான சிறப்பு விருதையும் கிள்ளான் மாநகரம் தட்டிச் சென்றது.
சுல்தான் ஆலம் ஷா கட்டிடம், மாநகர தலைமையகம், அமலாக்கத் துறை மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் துறை அலுவலகங்கள் உட்பட தெங்கு கெலானா கிளை அலுவலகம் ஆகிய ஐந்து கட்டிடங்கள் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக மேயர் டத்தோ அப்துல் ஹமிட் ஹுசைன் பெருமிதத்துடன் தெரிவித்தார்
.மாநகர மன்றத்துடன் இணைந்து நோர்த்போர்ட் மலேசியா, கிள்ளான் துறைமுக ஆணையம் மற்றும் 18 பொதுப் பள்ளிகள் உள்ளிட்ட 27 மூலோபாய கூட்டாளிகளும் இந்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பயணத்தில் தங்களின் பங்களிப்பிற்கு இதே போன்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.
மேலும், இரண்டு தனியார் பள்ளிகள், மூன்று தொழில்முறை கட்டிடங்கள், ஒரு வணிக மையம், ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் ஒரு மசூதி என கிள்ளான் வட்டாரத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களும் இந்த பசுமைத் திட்டத்தில் இணைந்து வைர விருதுகளைப் பெற்றுள்ளன.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் மலேசிய பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் காலநிலை மாற்றக் கழகத்தால் (MGTC) முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், கிள்ளான் நகரை ஒரு நிலையான மற்றும் பசுமையான நகரமாக மாற்றுவதில் MBDK தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.







