ஷா ஆலம், பிப் 27- சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா (RMS), நேற்று உலு சிலாங்கூர், சுங்கை தெங்கி ஜாமேக் மசூதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வின் போது, தகுதியுள்ள 525 பயனாளிகளுக்குத் தலா 500 ரிங்கிட் வீதம் மொத்தம் 262,500 ரிங்கிட் மதிப்பிலான ராயா அன்பளிப்புகளை இளவரசர் நேரடியாக வழங்கி மகிழ்ந்தார்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மாநில உயர் அதிகாரிகள் புடைசூழ வருகை தந்த இளவரசர், நோன்பு துறந்த கையோடு அங்குள்ள மக்களுடன் இணைந்து மஃரிப், இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகளிலும் பங்கேற்றார்.
இளவரசரின் கரங்களால் வழங்கப்பட்ட இந்த நிதியுதவியானது, அப்பகுதியைச் சேர்ந்த 99 ஃபக்கீர், 355 மிஸ்கின் மற்றும் 71 முவாலாஃப் பிரிவினரின் பெருநாள் காலச் சுமைகளைக் குறைக்கும் வகையில் அமைந்தது.
நிகழ்வு நடைபெற்ற சுங்கை தெங்கி ஜாமேக் மசூதியானது, மத்திய மற்றும் மாநில அரசுகளின் 5.3 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் 1,200 பேர் தொழுகை நடத்தும் வசதியுடன் நவீன முறையில் கட்டப்பட்ட ஒரு வழிபாட்டுத் தலமாகும்.
இஸ்லாமிய சமய விவகாரங்களின் முக்கியத்துவத்தையும் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றது.








