கோலாலம்பூர், பிப் 27- பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துவது மற்றும் தலைமை வழக்கறிஞர் - அரசு வழக்கறிஞர் அதிகாரங்களைப் பிரிப்பது தொடர்பான இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை சட்ட அமைச்சர் டத்தோஸ்ரீ அசலினா ஒத்மான் சைட் முதல் வாசிப்புக்காகத் தாக்கல் செய்தார்.
கூட்டாட்சி முகமைகளின் நிதி நிர்வாகத்தில் கண்டறியப்பட்ட 273 குளறுபடிகள் குறித்து விவாதித்த மக்களவை, மலேசியா மடாணி கொள்கையின் கீழ் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய தணிக்கையாளர் அறிக்கையை (LKAN) ஏற்றுக்கொண்டதுடன், தணிக்கை நடவடிக்கைகளால் 316.68 மில்லியன் ரிங்கிட் மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது.
செயற்கை நுண்ணறிவுடன் (AI) தொடர்பில்லாத புதிய தரவு மையங்களின் வருகையை கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் கட்டுப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாட்டின் நீர் மற்றும் மின்சார விநியோகத்தில் சமநிலையைப் பேணுவதே இதன் நோக்கம் என்று விளக்கமளித்தார்.
ஈரான்-அமெரிக்க பதற்றம், கல்வி வளாகத்தில் மாணவர் மரணம் மற்றும் குடியேற்ற அனுமதிச் சீட்டு சீர்திருத்தங்கள் போன்ற பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விரிவான பதில்களை வழங்கினர்.
இறுதியாக, குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய விவகாரம் மற்றும் ஊட்டச்சத்துக் கொள்கைகளை வலுப்படுத்துவது தொடர்பாகப் பெண்கள், குழந்தைகள் மற்றும் சுகாதாரத்திற்கான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழுக்கள் தயாரித்த அறிக்கைகள் அவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.








