செலாயாங், பிப் 26- செலாயாங் நகராண்மைக் கழகம் (MPS) ஏற்பாடு செய்த 'இஹ்யா ரமலான்' நிகழ்ச்சியின் கீழ், கோம்பாக் ரவுடாத்துல் அல் ஃபயீஸ் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 28 ஆதரவற்ற பிள்ளைகள் தங்களுக்குப் பிடித்த புத்தாடைகளைத் தாங்களே தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியுடன் வாங்கினர்.
சமூக மேம்பாட்டுத் துறையின் கீழ் நடைபெற்ற இந்த இனிமையான நிகழ்வில், 28 பிள்ளைகளும் 8 பாதுகாவலர்களும் கலந்துகொண்ட வேளையில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் புத்தாடைகள் வாங்க தலா 250 ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் பிள்ளைகள் தங்களுக்குத் தேவையான ஜூபா, பாஜு மலாயு, குர்தா, சொங்கோக் மற்றும் காலணிகள் உள்ளிட்ட பெருநாள் உடைமைகளை உற்சாகத்துடன் வாங்கி மகிழ்ந்ததாக செலாயாங் நகராண்மைக் கழகம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்நிகழ்வில் நேரில் கலந்துகொண்ட சமூக மேம்பாட்டுத் துறை இயக்குநர் அஹ்மட் ஃபவுசி இஷாக், பிள்ளைகள் தங்களுக்குப் பொருத்தமான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் உதவிகளை வழங்கினார்.
புத்தாடைகள் வாங்கிய இந்த பிள்ளைகள் அனைவரும் விரைவில் நடைபெறவுள்ள நகராண்மைக் கழகத்தின் நோன்புத் துறப்பு நிகழ்விற்கு அழைக்கப்படவுள்ளதுடன், அங்கு அவர்களுக்குத் தலா 100 ரிங்கிட் பெருநாள் அன்பளிப்புப் பணமும் வழங்கப்படவுள்ளது.
மேலும், ரவுடாத்துல் அல் ஃபயீஸ் மையம் உட்பட நான்கு அமைப்புகளுக்கு தலா 1,000 ரிங்கிட் நன்கொடையும், யாயாசான் இஸ்லாம் தாருல் எசான் (YIDE) அமைப்புக்கு 2,000 ரிங்கிட் நிதியுதவியும் வழங்க நகராண்மைக் கழகம் திட்டமிட்டுள்ளது.







