சுங்கை பூலோ, பிப் 26- நாட்டின் நுழைவாயில்களில் பணிபுரியும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சி (AKPS) அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் நடக்கும் எந்தவொரு அதிகாரத் துஷ்பிரயோகம் அல்லது முறைகேடுகளுக்கும் அரசாங்கம் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்று உள்துறை அமைச்சு (KDN) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சேவையின் நேர்மைக்குக் களங்கம் விளைவிக்கும் எந்தவொரு அதிகாரி மீதும் சட்ட அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சின் துணை தலைமைச் செயலாளர் (பாதுகாப்பு) டத்தோ அப்துல் ஹலிம் அப்துல் ரஹ்மான் கூறினார்.
"அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள் அல்லது நேர்மைக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள், பொது அதிகாரிகள் (நடத்தை மற்றும் ஒழுங்கு) விதிகள் 1993 (திருத்தம் 2002)-இன் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்," என்று இங்கு நடைபெற்ற ஏகேபிஎஸ் உறுப்பினர்களுடனான 'இஹ்யா ரமலான் மற்றும் இஃப்தார்' நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டார்.
விமான நிலையங்கள், தரைவழி நுழைவாயில்கள் மற்றும் துறைமுகங்களில் பணிபுரியும் ஏகேபிஎஸ் அதிகாரிகள், முறையான நோக்கம் மற்றும் முழுமையான பயண ஆவணங்களைக் கொண்ட நபர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யும் பெரும் பொறுப்பைச் சுமக்கின்றனர் என்று அவர் கூறினார்.
"உங்களின் பங்கு வெறும் சோதனையுடன் முடிந்துவிடுவதில்லை. நாட்டின் நுழைவாயிலில் பணிபுரிவது எளிதானதாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில், நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் காப்பதில் இது ஒரு பெரிய பொறுப்பாகும்," என்றார் அவர்.
நாட்டின் எல்லைக் கட்டுப்பாடு திறமையாகவும் நம்பகத்தன்மையுடனும் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, ஒவ்வொரு பணியிலும் நேர்மை முக்கிய அம்சமாக இருக்க வேண்டும் என்று அப்துல் ஹலிம் வலியுறுத்தினார்.
குடிநுழைவுத் துறை மற்றும் சுங்கத் துறை உட்பட, முன்பு தனித்தனியாக இயங்கி வந்த 20-க்கும் மேற்பட்ட ஏஜென்சிகளின் பங்களிப்பை ஒன்றிணைத்து, அங்கீகரிக்கப்பட்ட நுழைவாயில்களில் நடவடிக்கைகளைக் கையாள ஏகேபிஎஸ் நிறுவப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
"முன்பு, 20-க்கும் மேற்பட்ட ஏஜென்சிகள் நாட்டின் எல்லையில் தனித்தனியாகச் செயல்பட்டன. இப்போது, எல்லைக் கட்டுப்பாட்டுப் பணிகளை மிகவும் திறம்படச் செயல்படுத்த, நம்மிடம் வலுவான, ஒருமுகப்படுத்தப்பட்ட குழு உள்ளது," என்று அவர் கூறினார்.
முன்னதாக, இந்த நிகழ்வில் சுங்கை பூலோவைச் சுற்றியுள்ள ஆறு பள்ளிகளைச் சேர்ந்த 200 தஃபீஸ் மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் ஏகேபிஎஸ் துணை தலைமை இயக்குநர் (மேலாண்மை) இஸ்மாயில் மொக்தார் மற்றும் துணை தலைமை இயக்குநர் (கொள்கை) சுரைனி ஒத்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.







