தைப்பிங், பிப் 25- தைப்பிங், சிம்பாங்கில் உள்ள தாமான் டாமாய் பகுதியில் மாலை தாக்கிய சூறாவளி மற்றும் மரம் சாய்ந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்கள் தங்குவதற்காக ஒரு தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது.
தாமான் காயா பல்நோக்கு மண்டபத்தில் அந்த நிவாரண மையம் மாலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டதாக லாரூட், மாத்தாங் மற்றும் செலாமா மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் முகமது நஸ்ருல் மென்ஹாட் கூறினார்.
"உடனடியாக வீடுகளைச் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள முடியாததால், 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். இதற்கிடையில், இரவு 8 மணி நிலவரப்படி, 10 குடும்பங்களைச் சேர்ந்த 92 பேர் அந்த நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகப் புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற சேவை மையம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தாமான் காயா, கம்போங் செந்தோசா, பத்து 2 ½, கம்போங் பாக் டாருஸ், தாமான் ரியா, தாமான் டாமாய், தாமான் பெங்காலான் இந்தா, பெங்காலான் அவுர், பி.பி.ஆர். சிம்பாங் பெர்டானா மற்றும் ஜாலான் சிம்பாங் ஆகியவை அடங்கும்.
இந்த சூறாவளியால் மரங்கள் விழுந்து வீடுகள் சேதமடைந்தன, வீட்டுக்கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன, வணிக வளாகங்களின் கூரைகள் இடிந்து விழுந்தன, ரமலான் சந்தைக் கூடாரங்கள் சேதமடைந்தன, பெங்காலான் அவுர் பள்ளிவாசலின் நடைபாதை மற்றும் கல்லறைத் தோட்டத்தின் வேலி சேதமடைந்தது, தாமான் பெங்காலான் இண்டா சூராவின் கூரை பெயர்ந்தது மற்றும் பல வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டது.







