ஷா ஆலம், பிப் 24 - உலு சிலாங்கூர், புக்கிட் செந்தோசாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நடந்த கலவரச் சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு உதவ ஆறு ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் முகநூலில் பரவலான (வைரலான) அச்சம்பவத்தின் காணொளிப் பதிவைக் கண்டறிந்ததாகவும், அதன் பிறகு இருவேறு போலீஸ் புகார்களைப் பெற்றதாகவும் சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷசெலி காஹார் கூறினார்.
"இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட அதிருப்தி மற்றும் கருத்து வேறுபாடே இச்சம்பவத்திற்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.கிடைத்த தகவலின் அடிப்படையில், 18 முதல் 49 வயதுக்குட்பட்ட உள்ளூர்வாசிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
கலவரத்தில் ஈடுபட்டதற்காக, குற்றவியல் சட்டப் பிரிவு 148-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
இச்சம்பவத்தில் குண்டர் கும்பல் நடவடிக்கைகள் அல்லது இனப் பிரச்சனைகள் சம்பந்தப்படவில்லை என்றும் ஷசெலி காஹார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
"பொதுமக்கள் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் என்றும், வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்றும் அவர் கூறினார்.








