கோலாலம்பூர், பிப் 13 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி, சமீபத்திய புளூம்பெர்க் அறிக்கை மீது சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார். அந்த அறிக்கை தவறாக வழிநடத்தும் வகையிலும், அவதூறானதாகவும், தனது நற்பெயருக்கும் ஆணையத்தின் நேர்மைக்கும் களங்கம் விளைவிப்பதாகவும் அவர் வர்ணித்துள்ளார்.
அவரது வழக்கறிஞர்களான சைன் மெகாட் & மூராட் சட்ட நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இது தொடர்பான நடவடிக்கையைத் தொடங்கவும், இழப்பீட்டு கோரிக்கைகள் மற்றும் பிற பொருத்தமான நிவாரணங்கள் உட்பட அப்பிரசுரம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் தங்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அப்பிரசுரத்தில் உள்ள அறிக்கை, பரிந்துரைகள் மற்றும் மறைமுகக் கருத்துக்கள் அவதூறானவை, பொறுப்பற்றவை மற்றும் மிகவும் தவறாக வழிநடத்துபவையாகும். அவை எங்கள் கட்சிக்காரருக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல், SPRM நிறுவனத்தின் கௌரவம், நம்பகத்தன்மை மற்றும் நேர்மைக்கும் தீங்கு விளைவித்துள்ளன."
"அறிக்கையிடப்பட்ட விடயம் தொடர்பாக அசாம் எந்தவொரு சட்டத்தையும், ஒழுங்குமுறையையும் அல்லது பொதுச் சேவைத் தேவையையும் மீறவில்லை. சம்பந்தப்பட்ட அனைத்து நேரங்களிலும், பொது அதிகாரிகள் மீது விதிக்கப்பட்ட அனைத்து சொத்து அறிவிப்புக் கடமைகளையும் அவர் முழுமையாகப் பின்பற்றியுள்ளார்."
"பங்குகளின் கையகப்படுத்தல் மற்றும் விற்பனைகள், பொதுச் சேவைத் துறையின் தேவைகளுக்கு ஏற்ப, மனிதவள தகவல் மேலாண்மை அமைப்பு (HRMIS) உட்பட, நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் முறையாக அறிவிக்கப்பட்டன," என்று அந்நிறுவனம் கூறியது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பங்குகள், அது வெளியிடப்படுவதற்கு முன்பே விற்கப்பட்டுவிட்டன. இது தொடர்பான அறிவிப்புகள் மற்றும் பதிவு ஆவணங்கள் உள்ளன, அவற்றைச் சரிபார்க்க முடியும்.
"எங்கள் கட்சிக்காரர் தனது பொதுப் பணிகளைச் செய்வதில் நேர்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான தனது அர்ப்பணிப்பில் உறுதியாக இருக்கிறார்," என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் மலேசியாவில் உள்ள புளூம்பெர்க் அலுவலகங்களுக்கு அந்நிறுவனம் கோரிக்கை கடிதத்தை (LOD) அனுப்பியுள்ளதாகத் தெரியவருகிறது.
எந்தவொரு நிறுவனத்திலும் தன்னிடம் இப்போது பங்குகள் இல்லை என்றும், முந்தைய அனைத்து பங்குப் பரிவர்த்தனைகளும் வெளிப்படைத்தன்மையுடனும் அரசாங்க விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்கியே மேற்கொள்ளப்பட்டன என்றும் அசாம் நேற்று தெளிவுபடுத்தினார். மேலும், தனது வர்த்தகக் கணக்கு தற்போது காலியாக இருப்பதாகவும், அதை புர்சா மலேசியாவுடன் சரிபார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.


