பெட்டாலிங் ஜெயா, பிப் 11: தேசிய நிலச் சட்டத்தின் 425வது பிரிவின் கீழ், சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமிக்கும் தனிநபர்கள் அல்லது தரப்பினருக்கு ரிம500,000 வரை அபராதமும், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
நில ஆக்கிரமிப்பு வழக்குகளைக் கையாள்வதில் மாநில அரசு உடனடி அமலாக்கம் அல்லது சட்ட நடவடிக்கை என இரண்டு அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதாக இஸ்லாமிய விவகார ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் முகமது ஃபஹ்மி ங்கா தெரிவித்தார்.
உடனடி அமலாக்கத்தின் கீழ், நிலத்தை காலி செய்வதற்கான அறிவிப்பு மற்றும் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டமைப்புகளை அகற்றுவது போன்ற நடவடிக்கைகள் அடங்கும். அதேவேளையில், சட்டப்பூர்வ நடவடிக்கை என்பது தற்போதுள்ள சட்ட விதிகளின்படி நீதிமன்றத்தில் வழக்குத் தொடருதல் மற்றும் விசாரணை செயல்முறைகளை உள்ளடக்கியதாகும் என்று அவர் கூறினார்.
"பிஜேஎஸ் 4-இல் உள்ள இஸ்லாமிய கல்லறைக்காக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில், நேரமின்மை மற்றும் அந்த இடத்தை உடனடியாக மீட்க வேண்டிய அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு மாநில அரசு உடனடி அமலாக்க முறையைத் தேர்ந்தெடுத்தது.
"இந்த நிலம், இஸ்லாமிய கல்லறை மேம்பாட்டிற்காகத் தேவைப்படுகிறது. அதன் எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"நீதிமன்ற செயல்முறையைப் பின்பற்றினால், விசாரணை, வழக்குத் தொடர்தல் மற்றும் தீர்ப்பு என நீண்ட காலம் பிடிக்கும் என்பதால், அமலாக்க நடவடிக்கைகளை உடனடியாகச் செயல்படுத்த முடியாது," என்று அவர் மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
பிப்ரவரி 9-ஆம் தேதி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சமயம் பாராமல் சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊராட்சி மன்றங்களுக்கும் (பிபிடி) உத்தரவிட்டிருந்தார்.
விதிமுறைகளைப் பின்பற்றாத கட்டுமானங்களுக்கு இனி அனுமதி இல்லை என்றும், இந்த விவகாரத்தை முறையாகத் தீர்க்க வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமில்லாத பகுதிகளைச் சுத்தம் செய்ய ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமரின் இந்த உத்தரவுக்கும் அறிக்கைக்கும் டாக்டர் முகமது ஃபஹ்மி தனது நன்றியைத் தெரிவித்ததோடு, மாநில அளவிலான அமலாக்க நடவடிக்கைகள் ஏற்கனவே இருக்கும் அதிகார வரம்புகளுக்கு ஏற்ப முன்கூட்டியே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
முன்னதாக, பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியிட்ட ஓர் அறிக்கையில், சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா, ஜனவரி 31 வரை அனுமதியின்றி 687 கோயில்கள் கட்டப்பட்டுள்ளதாக வெளிப்படுத்தினார். மாநிலத்தில் உள்ள சுமார் 11.3 விழுக்காடு இந்து மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிக அதிகம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சிலாங்கூர் பௌத்தம், கிறிஸ்தவம், இந்து, சீக்கியம் மற்றும் தாவோயிசம் மீதான சிறப்புக் குழுவின் இணைத் தலைவர் வி.பாப்பாராய்டு, 58 கோயில்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு, இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான நிலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார்.
சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமிக்கும் தரப்பினருக்கு ரிம500,000 வரை அபராதம், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை
11 பிப்ரவரி 2026, 7:10 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உள்ளூர் பெண்களைத் திருமணம் செய்து வணிக உரிமம் பெறும் வெளிநாட்டினர்; சிலாங்கூர் அரசு நடவடிக்கை
s
23 ஜூன் 2026

national
பல்கலைக்கழகங்களில் 'pintu belakang' முறையில் மாணவர் சேர்க்கை: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு உயர்கல்வி அமைச்சு கண்டனம்
Shalini Rajamogun
18 ஜூன் 2026

selangor
உலு லங்காட்டில் அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்
Shalini Rajamogun
14 ஜூன் 2026

national
அனுமதியின்றி கட்டப்படும் சட்டவிரோதக் கட்டிடங்களுக்கு நீர், மின்சார விநியோகம் வழங்கப்படாது
Shalini Rajamogun
13 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



