ஷா ஆலாம், பிப் 10 – சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களின், குறிப்பாக சீன சமூகத்தின் தேவைகளையும் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்வதற்காக, பன்றி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கான உரிமத்தை வழங்குமாறு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அரசாங்கத்திற்குப் பரிந்துரைத்துள்ளார்.
சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த முறை பன்றி வளர்ப்புப் பிரச்சினையைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், தற்போதுள்ள நிலத்தை மேம்பாட்டு மற்றும் குடியிருப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியும்.
அதே வேளையில், மாசுபாடு ஏற்படும் என்ற கவலையின் காரணமாக சிலாங்கூரில் எந்த மாவட்டத்திலும் பன்றி வளர்ப்பு நடவடிக்கைகளுக்கு தாம் உடன்படவில்லை என்று சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் வலியுறுத்தினார்.
"பன்றி வளர்ப்புப் பிரச்சினை அனைத்து தரப்பினரிடமும் அமைதியின்மையை ஏற்படுத்துவதாலும், சீன சமூகத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதிப்பதாலும், இந்த விவகாரம் நிறுத்தப்பட்டு ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்துகிறார்."
"எனவே, அனைத்துத் தரப்பினரும் சுல்தானின் கட்டளைக்கு மதிப்பளித்து, இந்த மாநில மக்களின் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கூட்டாகப் பேணிப் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று டத்தோ முகமது முனீர் பானி கூறினார்.
முன்னதாக, புக்கிட் தாகாரில் பெரிய அளவிலான பன்றி வளர்ப்புத் திட்டம் குடியிருப்பாளர்களின் எதிர்ப்பை சந்தித்துள்ளதாலும், சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும் அதை ரத்து செய்யுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரைத்திருந்தார்.
மேலும், பன்றி வளர்ப்பு துர்நாற்றத்தை வெளியிடுவதன் மூலம் காற்று மாசுபாட்டையும், கழிவுகள் மற்றும் சாக்கடை வெளியேற்றத்தால் நீர் ஆதாரங்களையும் மாசுபடுத்துகிறது என்று சுல்தான் குறிப்பிட்டார்.


