கோல சிலாங்கூர், பிப் 10- சிலாங்கூர் மாநிலத்தில் முறையற்ற நிலங்களில் கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாளுவதில், கடந்த 15 ஆண்டுகளாக மாநில அரசு பின்பற்றி வரும் இணக்கமான அணுகுமுறையே தொடரும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சட்ட அமலாக்கம் மற்றும் பேச்சுவார்த்தை ஆகிய இருமுனை வியூகத்தின் மூலம், சமயங்களுக்கு இடையிலான நல்லுறவு பாதிக்காத வகையில் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக 'RIBI' என்று அறியப்பட்ட இந்த அதிகாரப்பூர்வக் குழு, தற்போது 'LIMAS' என மறுபெயரிடப்பட்டுச் செயல்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களை அகற்றுவது அல்லது அவற்றை முறைப்படுத்துவது என்பது சிலாங்கூரில் ஒரு தொடர்ச்சியான செயல்பாடாகவே இருந்து வருகிறது என்றார்.
சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளூராட்சி மன்றங்களுக்குப் பிரதமர் அண்மையில் முழு அதிகாரம் வழங்கியிருந்த நிலையில், மந்திரி புசாரின் இந்த விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.
இன்று, பெஸ்தாரி ஜெயாவில் நடைபெற்ற பெரிய அளவிலான பெஸ்தாரி சோலார் பிவி திட்டத்தின் பூமி பூஜை விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.


