ஷா ஆலாம், பிப். 10: வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது தொடர்பான விதிமுறைகள் மற்றும் முடிவுகளை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநில அரசாங்கங்களும் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
கூட்டரசு மட்டத்தில் தெளிவான கொள்கைகளுக்கு ஏற்ப, வழிபாட்டுத் தலங்கள் கட்டும் விவகாரம் சீராகக் கையாளப்படுவதை உறுதிசெய்ய, அரசியல் வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
"வழிபாட்டுத் தலங்கள், ஆலயங்கள் போன்றவை குறித்து, கூட்டரசு அரசாங்கத்தின் கீழ் நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன். எதிர்க்கட்சி மாநிலங்கள் உட்பட அனைத்து மாநில அரசாங்கங்களுடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவேன்.
"சில நேரங்களில் போராட்டத்தைப் பற்றி சத்தமாகப் பேசுகிறார்கள், ஆனால் சட்டவிரோத ஆலயங்கள் அவர்களின் மாநிலங்களில்தான் அதிகமாக உள்ளன.
இந்த அரசியல் வேறுபாடுகளை நாம் ஒதுக்கி வைக்க வேண்டும், ஏனெனில் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தெளிவான கொள்கைகள் அவசியம் என கூட்டரசு அரசாங்கம் முடிவு செய்துள்ளது," என்றார் அவர்.


