ஷா ஆலாம், பிப் 9- பத்து 9, செராஸ், பெக்கான் சண்டெக்ஸ் போக்குவரத்து விளக்கு அருகே நேற்று நடந்த சிறிய விபத்தைத் தொடர்ந்து, 69 வயது முதியவரைத் தாக்கி உதைத்த சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலை 4.49 மணியளவில் பாதிக்கப்பட்ட அந்த முதியவரிடமிருந்து புகார் பெறப்பட்டதாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார். சம்பவ இடத்தில் சந்தேக நபரால் தாக்கப்பட்டதாகவும் மிரட்டப்பட்டதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, 52 வயதான சந்தேக நபர், நேற்று இரவு 11.30 மணியளவில் காஜாங் பகுதியில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
"காயம் ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் 323-வது பிரிவின் கீழும், குற்றவியல் மிரட்டலுக்காக அதே சட்டத்தின் 506-வது பிரிவின் கீழும் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது," என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது விசாரணை அதிகாரி சார்ஜென்ட் கணேசன் ராமச்சந்திரனை 012-608 9180 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.


