புத்ராஜெயா, பிப் 9- நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் அல்லது பிறருக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்படும் எந்தவொரு வழிபாட்டுத் தலங்களுக்கும் அரசாங்கம் அங்கீகாரம் வழங்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் சட்டத்திற்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே அவை கட்டப்பட அனுமதிக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
"சட்டத்தை மதித்து நடந்தால் அனைத்தும் சாத்தியமே. ஆனால், அடுத்தவர் நிலத்தை ஆக்கிரமித்துவிட்டு அங்கு எப்படி இறைவழிபாடு செய்ய முடியும்? இது முரணான செயலாகும்.
அனுமதியின்றி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களைச் சட்டப்பூர்வமானதாக மாற்றும்படி யாரையும் வற்புறுத்த முடியாது. எங்களின் முடிவு தெளிவானது; அத்தகைய இடங்கள் சட்டவிரோதமானவை," என்று அவர் கூறினார்.
தேசிய ஒற்றுமை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவற்றை அகற்ற உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மத விவகாரங்கள் முறையாகவும் சட்டப்படியும் கையாளப்பட வேண்டும் என்று கூறிய பிரதமர், இதில் இன உணர்வுகளைத் தூண்டி இடையூறு விளைவிக்க வேண்டாம் என்று அனைத்துத் தரப்பினரையும் எச்சரித்தார்.
குறிப்பாக, இனம், மதம் மற்றும் அரச நிறுவனம் (3R) தொடர்பான உணர்ச்சிகரமான விவகாரங்களில் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.


