சிப்பாங், பிப் 8 - மலேசியாவுக்கு இரண்டு நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தாயகம் புறப்பட்டார்.
பிரதமர் மோடி மற்றும் அவரின் குழுவினரை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா ராயா வளாகத்தில் இருந்து மாலை மணி 4.35க்குப் புறப்பட்டது.
அங்கு மோடிக்கு, அரச மலேசிய இராணுவப் படையின் முதல் படைப்பிரிவைச் சேர்ந்த 28 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களின் மரியாதை அணிவகுப்பு உட்பட முழு அரச மரியாதை வழங்கப்பட்டது.
மேலும், மலேசியாவில் வாழும் பல்லின மக்களைப் பிரதிபலிக்கும் வகையில் சில கலாச்சார படைப்புகளும் நடைபெற்றன. அதுமட்டுமில்லாமல், டெங்கில் மற்றும் பந்திங் அறிவியல் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த சுமார் நூறு மாணவர்கள் மலேசிய மற்றும் இந்தியாவின் தேசியக் கொடியை அசைத்து அவரை வழி அனுப்பி வைத்தனர்.
பெர்னாமா


