சிறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் கைதிக்குச் சுல்தான் மன்னிப்பு; நேரில் சந்தித்து நெகிழ்ச்சி

4 பிப்ரவரி 2026, 9:42 AM
சிறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் கைதிக்குச் சுல்தான் மன்னிப்பு; நேரில் சந்தித்து நெகிழ்ச்சி
சிறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் கைதிக்குச் சுல்தான் மன்னிப்பு; நேரில் சந்தித்து நெகிழ்ச்சி
சிறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் கைதிக்குச் சுல்தான் மன்னிப்பு; நேரில் சந்தித்து நெகிழ்ச்சி

ஷா ஆலம், பிப் 4: சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அவர்கள், சிறைத்தண்டனையின் போது முனைவர் (PhD) பட்டம் பெற்ற மலேசியாவின் முதல் நபரான மாலிக் யாத்தமை இன்று நேரில் சந்தித்தார்.

சிலாங்கூர் அரச அலுவலகத்தின் தகவல்படி, சுல்தான் அவர்கள் முன்னாள் கைதி ஒருவரைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். மாலிக் யாத்தமிற்கு கடந்த 2024-ஆம் ஆண்டு சுல்தானின் பிறந்தநாளின் போது முழு மன்னிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமைதியாகவும் நெகிழ்ச்சியாகவும் அமைந்த இந்தச் சந்திப்பின் போது, விடுதலையான பிறகு மாலிக்கின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது என்பது குறித்தும், அவரது எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் சுல்தான் கேட்டறிந்தார். மாலிக்கின் வாழ்க்கைப்பயணம் தம்மை நெகிழ்ச்சியடையச் செய்ததாகவும், ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள அவருக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் சுல்தான் தெரிவித்தார்.

"மாலிக்கின் வாழ்க்கைப் பயணம் என்னை மிகவும் பாதித்தது. அவருக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். எனது பரிசீலனைக்கு வழங்கப்பட்ட அனைத்து காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டே அவருக்கு மன்னிப்பு வழங்க முடிவு செய்தேன்," என சுல்தான் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாலிக், 'சுல்தானின் விருப்பப்படி தடுத்து வைக்கும் உத்தரவின்' (Sultan’s Pleasure Detention) கீழ் விடுதலை தேதி குறிப்பிடப்படாமல் 24 ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகு, கடந்த 2024 டிசம்பர் 11 அன்று விடுதலையானார். 2024 நவம்பர் 24 அன்று நடைபெற்ற மன்னிப்பு வாரியக் கூட்டத்தைத் தொடர்ந்து சுல்தான் அவருக்கு முழு மன்னிப்பு வழங்கினார்.

2001-ஆம் ஆண்டு, மாலிக் தனது 14-ஆவது வயதில் குற்றம் இழைத்தபோது சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஒரு சிறுவன் என்பதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை. தற்போது 39 வயதாகும் மாலிக், காஜாங் சிறையில் இருந்தவாறே தனது கல்வியைத் தொடர்ந்ததன் மூலம் வணிக நிர்வாகத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இந்த உணர்ச்சிகரமான சந்திப்பின் முடிவில், மாலிக் தனது வாழ்க்கைத் தரத்தைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் சுல்தான் அறிவுறுத்தினார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.