ஷா ஆலாம், ஜூலை 8 - சிலாங்கூரில், பேரங்காடியில் உள்ள தொழுகையிடங்களில் வெள்ளிக்கிழமை தொழுகையை மேற்கொள்ள அம்மாநில சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரீஸ் ஷா அல்ஹாஜ் அனுமதி அளிக்கவில்லை.
சிலாங்கூர் மாநிலத்தின் இஸ்லாம் மதத்தின் தலைவர் என்ற முறையில், மாநில சுல்தான் அம்முடிவினை எடுத்திருப்பதாக, சிலாங்கூர் இஸ்லாமிய மன்றத்தின் ( MAIS) தலைவர் டத்தோ சலேஹுடின் சய்டின் தெரிவித்தார்.
முஸ்லீம்களின் முக்கியத் தொழுகை இடமாக பள்ளிவாசல் தொடர்ந்து விளங்குவதை உறுதிச் செய்வதோடு, வெள்ளிக்கிழமை தொழுகையின்போது பள்ளிவாசலில் முஸ்லீம்களின் எண்ணிக்கை குறைவதைத் தடுக்கவும் சுல்தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
சிலாங்கூரில் தற்போது 448 பள்ளிவாசல்களும், 379 தொழுகையிடங்களும் வெள்ளிக்கிழமை தொழுகையை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இந்த தொழுகையிடங்கள் முஸ்லீம்கள் தொழுவதற்கான போதிய இடவசதிகளைக் கொண்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.
அதோடு, அருகில் பள்ளிவாசல் இல்லாத காரணமாக, தற்போதைக்கு சிலாங்கூரில் ஒரு பேரங்காடியில் மட்டும் வெள்ளிக்கிழமை தொழுகையை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அருகில் பள்ளிவாசல் கட்டப்பட்டவுடன் அந்த அனுமதி மீட்டுக் கொள்ளப்படும் என்றாரவர்.
இதற்கு முன்னர், நாடு முழுவதுமுள்ள பேரங்காடிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவதாக சமய விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுள்ள பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி ஹாசான் தெரிவித்திருந்தார்.





