சிரம்பான், பிப் 3: தம்பின், புங்கா தஞ்சோங் சாலையில் நேற்றிரவு நிகழ்ந்த விபத்தில், 14 வயது சிறுவன் ஒருவன் 10 மீட்டர் ஆழமுள்ள கழிவுநீர்க் குழாய் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தான். தனது அண்ணனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
விபத்து நடந்த ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு, தம்பின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுவன் உயிரிழந்ததாக தம்பின் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் அமிருடின் சாரிமான் தெரிவித்தார். "முதற்கட்ட விசாரணையில், தம்பின் நகரிலிருந்து கோலா இனாவிலுள்ள நண்பரின் வீட்டிற்கு அவர்கள் இருவரும் சென்றுகொண்டிருந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திலுள்ள வளைவு ஒன்றில் திரும்பும்போது, அண்ணன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கட்டுமானப் பணியில் இருந்த நீர் விநியோகக் குழாய் மீது மோதியதாக கூறப்பட்டது. பின்னால் அமர்ந்திருந்த தம்பி தூக்கி வீசப்பட்டு ஆழமான பள்ளத்தினுள் விழுந்தான்," என்று அவர் விவரித்தார்.
இச்சம்பவம் குறித்து சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாகத் தகவல் தெரிந்த பொதுமக்கள், தம்பின் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவு புலனாய்வு அதிகாரியை 06-4412502 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


