ஷா ஆலம், ஜன 30: நகரத்தின் தூய்மை மற்றும் நலனைத் தொடர்ந்து பாதுகாக்க, பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக, ஜாலான் PJU 1A/7 பகுதியில் உள்ள சட்டவிரோதமாகக் குப்பைகளை அகற்றும் இடத்தை பெட்டாலிங் ஜெயா மேயர், டத்தோ முகமட் சஹ்ரி சமிங்கோன், ஆய்வு செய்தார்.
நேற்று நடைபெற்ற இந்த ஆய்வு, சட்டவிரோதமாகக் குப்பை அகற்றும் ‘ஹாட்ஸ்பாட்’ பகுதிகளை கண்காணிப்பதற்கும், நகரத் தூய்மையைப் பாதுகாக்க அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்குமான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டது.
“2026ஆம் ஆண்டில் இதுவரை, எம்பிபிஜே மொத்தம் 24 ஹாட்ஸ்பாட் இடங்களை கண்டறிந்துள்ளது. இது 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீத குறைவைக் காட்டுகிறது.
“அவற்றில் 16 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, அமலாக்க நடவடிக்கைகளின் செயல்திறன் மேலும் வலுப்படுத்தப்படுகிறது.
“எம்பிபிஜே அமலாக்கத் துறையின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் விளைவாக, சட்டவிரோதமாகக் குப்பை கொட்டும் நடவடிக்கையிக் ஈடுபட்ட லாரி ஒன்று, 13 ஜனவரி 2026 அன்று அதே இடத்தில் பறிமுதல் செய்யப்பட்டது,” என எம்பிபிஜே தெரிவித்தது.
நகரத் தூய்மை விதிமுறைகளை மீறும் எந்தவொரு செயலுக்கும் தாங்கள் சமரசம் செய்யமாட்டோம் என்று வலியுறுத்தி, பொதுமக்கள் பதிவு செய்யப்பட்ட திடக்கழிவு ஒப்பந்ததாரர்களின் சேவைகளை பயன்படுத்தவும், சரியான இடங்களிலேயே கழிவுகளை அகற்றுமாறும் எம்பிபிஜே அறிவுறுத்தியது.
மேலும், சட்டவிரோதமாகக் குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் குறித்து தகவல் வழங்க அல்லது புகார் அளிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை எம்பிபிஜே வரவேற்கிறது.



