புத்ராஜெயா, ஜன 28 - முன்னதாகப் பிரதமர் துறையின் கீழ் செயல்பட்டு வந்த இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா தற்போது மனிதவள அமைச்சிற்கு மாற்றப்பட்டுள்ளது என அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்தார்.
மடாணி அரசாங்கத்தின் கீழ் இந்திய சமூகத்திற்கான திட்டங்களை கட்டமைத்து ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதோடு இந்த முடிவை அமைச்சரவை அண்மையில் அங்கீகரித்து உள்ளதாகவும் அவர் தெளிவுப்படுத்தினார்.
நிர்வாகம் மற்றும் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படும் வரையில், மித்ராவை மனிதவள அமைச்சின் கீழ் கொண்டு வருவதால் எந்தவிதமான முரண்பாடும் ஏற்படாது என்று அவர் வலியுறுத்தினார்.
"முன்பு மித்ரா பிரதமர் துறையின் கீழ் செயல்பட்டது. அப்போது நான் துணை அமைச்சராக இருந்தபோது மித்ராவிற்காக நிறைய பேசினேன். இன்று முழு அமைச்சராக இருக்கிறேன். பிரதமர் என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை எனக்கு கொடுத்துள்ளார்," என செய்தியாளர் சந்திப்பில் ரமணன் கூறினார்.
-- பெர்னாமா


