சுபாங் ஜெயா, ஜன 27: எதிர்வரும் பிப்ரவரி 7ஆம் தேதி சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்கூட்டியே நடத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை அனைத்து சமூகங்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டது.
பூச்சோங்கில் உள்ள தாமான் ரெக்ரியாசி வாவாசான் எனும் இடத்தில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சி, பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 10,000 பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிலாங்கூர் மாநில முதலீட்டு, வர்த்தகம் & இயக்கம் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
“சீனப் புத்தாண்டு பிப்ரவரி 17ஆம் தேதி வந்தாலும், ரமடான் மாதத்தால் அதன் கொண்டாட்டத்தை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
“சமூகக் கொண்டாட்டம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும், நோன்பு இருக்கும் முஸ்லிம்களை மதிக்கும் வகையிலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது,” என்று அவர் கூறினார்.
சுபாங் ஜெயா மாநகராட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். இதில் இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஹசான் அசாரி இட்ரிஸும் கலந்து கொண்டார்.
இந்த ஆண்டு கொண்டாட்டத்தில் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் பாரம்பரிய யீ சாங்கிற்குப் பதிலாக அரிசி கலவை நிகழ்வு இடம்பெறும் என இங் ஸீ ஹான் கூறினார்.
இன்வெஸ்ட் சிலாங்கூர் மற்றும் சுபாங் ஜெயா மாநகராட்சியுடன் இணைந்து மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு, சமூகத்தின் அனைத்து மட்டத்தினரும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பொதுமக்களுக்கு இரவு முழுவதும் கலாச்சார நடனங்கள், இசை நிகழ்ச்சி, சிங்க நடனங்கள், வாயாங் குலிட் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான 1,500 டூயிட் ராயா அட்டைகள் மற்றும் பெரியவர்களுக்கு 5,000 சிறிய அரிசிப் பொட்டலங்கள் வழங்கப்படும்
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, ரேபிட் ஆன் டிமாண்ட் செயலி வழியாக ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து மற்றும் ஆன்-டிமாண்ட் டிரான்சிட் (DRT) வேன்கள் போன்ற மின்-ஹெய்லிங் சேவைகள் அல்லது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அவர் பொதுமக்கலூக்கு அறிவுறுத்தினார்.


